தாத்ரி படுகொலை சம்பவம் நாட்டுக்கு பெரும் அவமானம்- கொந்தளிக்கிறது பா.ஜ.க. கூட்டணி கட்சியான அகாலிதளம்
டெல்லி: தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முஸ்லிம் முதியவர் இக்லாக் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டது என்று பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளம் கடுமையாக சாடியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி மதவெறியர்களால் முஸ்லிம் முதியவர் இக்லால் அடித்தே படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பல நாட்கள் மவுனமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடி பின்னர், தாத்ரி நிகழ்வு ஒரு துரதிருஷ்டவசமானது என கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், கோத்ரா படுகொலைகளால்தான் பிரதமர் நரேந்திர மோடியை உலகம் அறிந்தது; நாங்களும் அதற்காகத்தான் மதிக்கிறோம் என்று சாடியிருந்தார்.
இந்நிலையில் பா.ஜ.க. வின் மற்றொரு கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளம், தாத்ரி சம்பவத்தை முன்வைத்து சங் பரிவார இந்துத்துவா அமைப்புகளை மிகக் கடுமையாக சாடியுள்ளது.
இது குறித்து அகாலிதளத்தின் மூத்த தலைவரான நரேஷ் குஜ்ரால் எம்.பி. கூறியுள்ளதாவது:
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தியை கிளப்பி முஸ்லிம் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தாத்ரி சம்பவம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார். இருந்தபோதும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தருணம் இது. அதுவும் முக்கிய பொறுப்புகளில் இருந்து கொண்டு இப்படி பொறுப்பற்றதனமாக பேசுவதை ஏற்கவே முடியாது.
இத்தகைய சம்பவங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் பா.ஜ.க.வையும் கடுமையாக பாதிக்கும். சங் பரிவாரங்களின் இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கைகளை சகித்துக் கொண்டிருக்க முடியாது.
இவ்வாறு நரேஷ் குஜரால் சாடியுள்ளார்.