தலித்துகள் மீதான தாக்குதல் எதிரொலி... தலித் எம்பிக்களுடன் பாஜக முக்கிய தலைவர்கள் ஆலோசனை
காந்திநகர்: தலித் மக்களின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து மக்களவையில் விவாதம் ஏற்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக பாஜக மூத்த தலைவகள் அக்கட்சியில் உள்ள தலித் எம்பிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சமீபகாலமாக பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக எஸ்சி மோர்ச்சாவில் இருந்து வரும் தகவல் தெரிவிப்பதாவது: கடந்த செவ்வாய் கிழமை மாலை பாஜக முக்கிய தலைவர்கள் தலித் எம்பிக்களுடன் குஜராத் பவனில் கலந்து ஆலோசனை நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் ராம் சங்கர் காத்ரினா, அமைப்பின் பொதுச்செயலாளர் ராம்லால், புபேந்திர யாதவ் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்சி மோச்சாவின் தலைவர் கவுதம் துஷ்யந்த் பாஜக எம்பிகள் தலித் மக்களை சந்தித்து மத்திய அரசு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அரசானது தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கானது என்பதை தெரிவிக்க வேண்டும். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நலிவடைந்த மக்களுக்கானது என்பதை எம்பிக்கள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதிக தலித் எம்பிக்களை கொண்ட கட்சியாக பாஜக உள்ள நிலையில், அந்த மக்களிடம் இருந்து பாஜவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்று கூறினார்.
பல்வேறு மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எதிர்கட்சிகள் பசு பாதுகாப்பு அமைப்புகள், சங் பரிவார் மீதும் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன.
இதனிடையே சமீபத்தில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சொந்த சகோதர, சகோதரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம் என்றார். மேலும், பல நூற்றாண்டுகளாக இன்னல்களை அனுபவித்த தலித் மக்களை மேலும் சித்ரவதைக்குள்ளாக்க வேண்டாம். தலித் மக்கள் மீது அன்பு காட்டாதவர்களை உலகம் ஒருபோதும் மன்னிக்காது. தாக்குதல் நடத்துபவர்களும், துப்பாக்கியால் சுடுபவர்களும் தம்மை வேண்டுமானால் குறிவைக்கட்டும் தலித்துக்கள் மீது அவர்கள் நடத்த வேண்டாம் என பிரதமர் மோடி ஆவேசமாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.