குஜராத்: தலித் தொழிலாளி அடித்துக் கொலை... இருவர் கைது
குஜராத்தில் தலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
Recommended Video
ராஜ்கோட்: குஜராத்தில் தலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ராஜ்கோட்டைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் சாவ்ஜி வானியா (40). இவர் அங்குள்ள ஷாபார்- வேராவல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலைக்கு வந்த அவரை தொழிற்சாலை கேட்டில் கட்டி வைத்து 5 தொழிலாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பேன்ட் பெல்ட்டை கழற்றி 5 பேரும் அடித்தனர்.
வானியாவை திருடன் என்று நினைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இவற்றை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. அப்போது அங்கு வந்த இரு பெண்கள் இந்த தாக்குதலை தடுத்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீஸாரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். வானியாவை ராஜ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே வானியாவின் உடலை பெறுவோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.