ராஜஸ்தானில் 3 தலித் சிறுவர்களை அடித்து, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கும்பல்
சிட்டோகார்: ராஜஸ்தானில் உயர் ஜாதியை சேர்ந்த ஒருவரின் பைக்கை திருடிய 3 தலித் சிறுவர்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று அடித்து நொறுக்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்டகார் பகுதியை சேர்ந்த 13 முதல் 15 வயது வரையிலான 3 தலித் சிறுவர்கள் உயர் ஜாதியை சேர்ந்த ஒருவரின் பைக்கை திருடிவிட்டனர்.
இதையடுத்து ஒரு கும்பல் அந்த சிறுவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து, நிர்வாணமாக்கி, அடித்து உதைத்துள்ளது. பின்னர் சிறுவர்களை நிர்வாணமாக ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது.
இது குறித்து உள்ளூர்காரர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவர்களை அந்த கும்பலிடம் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுவர்கள் பைக்கை திருடியதை ஒப்புக் கொண்டதால் திருட்டு வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சிறுவர்களை தாக்கியது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீார் 6 பேரை கைது செய்துள்ளனர்.