குஜராத் சட்டசபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ் மேவானி முடிவு
குஜராத் சட்டசபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட இருப்பதாக ஜிக்னேஷ் மேவானி தெரிவித்து உள்ளார்.
அகமதாபாத் : குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக தலித் சமூகத்திற்காகப் போராடி வரும் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்து உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.,வும் தீவிரமாக இயங்கி வருகின்றன. ஏற்கனவே பல ஆண்டுகளாக ஆண்டுவரும் பா.ஜ.க மீது பல்வேறு சமூகத் தலைவர்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.
அவர்களின் ஆதரவைப்பெற்று அதன் மூலம் பா.ஜ.க எதிர்ப்பு ஓட்டுகளைப் பெற காங்கிரஸ் முயற்சி செய்துவருகிறது. பட்டேல் சமூகத்திற்காக இடஒதுக்கீடு கேட்டுப் போராடி வரும் பட்டேல் இன போராட்டக்குழுவின் தலைவர் ஹர்திக் பட்டேல் சில நாட்களுக்கு முன் காங்கிரஸிற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
அதுபோல இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் கூட்டமைப்பின் தலைவர் அல்பேஷ் தாகூரும் காங்கிரஸிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர்களைப் போல தலித் சமுதாய மக்களுக்காகப் போராடி வரும் ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸிற்கு ஆதரவளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை ட்விட்டர் மூலம் தான் தனித் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட இருப்பதாக ஜிக்னேஷ் அறிவித்து உள்ளார்.
Friends, I m contesting from Vadgam-11 seat of Banaskantha district of Gujarat as an independent candidate. We shall fight, we shall win.
— Jignesh Mevani (@jigneshmevani80) November 27, 2017
"நண்பர்களே, பனாஸ்கந்தா மாவட்டத்தின் வட்கம்-11 தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். நாம் போராடுவோம், வெற்றிபெறுவோம்", என தன் ட்விட்டர் பக்கத்தில் ஜிக்னேஷ் மேவானி பதிவிட்டுள்ளார்.
மேலும், இதில் தனக்கும், பா.ஜ.க.,விற்கும் இந்தத் தொகுதியில் நேரடி போட்டி நிலவ வேண்டும் என்றும் இதனால் காங்கிரஸ் உட்பட வேறு கட்சிகள் யாரும் இங்கு வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.