ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய மகத்தான மாமனிதர் பாபு ஜெகஜீவன்ராமின் மகள் மீராகுமார்!
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீராகுமார் தீண்டாமையை ஒழிப்பதற்காக பாடுபட்ட பாபு ஜெகஜீவன் ராமின் மகள்.
டெல்லி : தலித் சமுகத்தினரை கோயிலுக்குள் சென்று வழிபடவும், தீண்டாமைக்கு எதிராகவும் 1935 காலகட்டத்திலேயே போராடிய மிகப்பெரும் தலைவரின் மகள் மீராகுமார் தான் தற்போது எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் லோக்சபா சபாநாயகரான மீராகுமார் அனைத்து கட்சி எம்எல்ஏக்களையும் அரவணைத்து சபையை நடத்துவதில் மிகவும் சிறந்தவர். அமைதியின் மறு உருவான மீராகுமார் தனது மெல்லிய குரலால் பேசுவது அவரது வயதிற்கும், தோற்றத்திற்கும் நேர் எதிராக இருக்கும். மெத்த படித்த மேதாவி என்றோ தீண்டாமையை ஒழிப்பதற்காக பாடுபட்ட தலைவரின் மகள் என்றோ தலைகணம் இல்லாதாவர்.
தீண்டாமையை எதிர்த்தவர்
பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் தலித் சமூகத்தில் பிறந்தவர் ஜெகஜீவன்ராம். பள்ளிப்பருவத்தில் இருந்தே தீண்டாமையால் ஒதுக்கப்பட்ட ஜெகஜீவன்ராம் உயர்சாதி மாணவர்கள் பயன்படுத்துகின்ற பானை நீரைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சாதி வேறுபாடுகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்று போராடி அதில் வெற்றியும் கண்டவர்.
காங்கிரசில் ஐக்கியம்
1931ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஜெகஜீவன் ராம் ஒரே தொகுதியில் 10 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர், அவரக்கு அந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. 1935 இல் அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பு உருவாவதில் பேருதவியாக இருந்த பாபு ஜெகஜீவன் ராம்.
அரசியல் சட்டத்தில் சமூக நீதி
கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதையும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதையும் அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர், அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்து சமூக நீதிக் கருத்து அரசியல் சட்டத்தில் இடம் பெறக் காரணமாக இருந்தார்.
தந்தை வழியில் மகள்
தன்னுடைய முதல்மனைவி இறந்துவிட 1935ம் ஆண்டு இந்திராணி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார் ஜெகஜீவன் ராம். இந்த தம்பதியருக்குப் பிறந்தவர் தான் மீராகுமார். நிறைகுடம் எப்போதுமே தளும்பாது என்பது போல மிகப்பெரிய தலித் தலைவரின் மகளான மீராகுமார் தந்தையைப் போலவே சிறந்த அரசியல் தலைவராக தன்னுடைய பணியை செய்து வருகிறார். நாட்டின் முதல் லோக்சபா பெண் சபாநாயகர் என்ற பெருமையை பெற்றவர். பாஜக சார்பில் தலித்தாக ராம்நாத்கோவிந்த் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து நிற்பதற்கு சரியான வேட்பாளர் என்ற அடிப்படையில் மீராகுமார் தற்போது குடியரசுத் தலைவர் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.