அம்பேத்கருக்கு மாசு... மேனகா காந்தி மரியாதை செலுத்திய சிலையை பாலால் சுத்தம் செய்த மக்கள்!
மத்திய அமைச்சர் மேனகா காந்தி மற்றும் பாஜக தலைவர்கள் மரியாதை செலுத்தியதால் அம்பேத்கர் சிலை மாசடைந்துவிட்டதாகக் கூறி தாழ்த்தப்பட்ட மக்கள் அம்பேத்கர் சிலையை பாலால் சுத்தப்படுத்தியுள்ளனர்.
வதோதரா : உத்திரபிரதேச மாநிலம் வதோதராவில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மற்றும் பாஜக தலைவர்கள் மரியாதை செலுத்திய அம்பேத்கர் சிலையை தாழ்த்தப்பட்ட மக்கள் பாலால் சுத்தப்படுத்தியுள்ளனர். பாஜக தலைவர்கள் மரியாதை செலுத்தியதால் அம்பேத்கர் சிலை மாசடைந்துவிட்டதாக கூறி அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
சட்டமாமேதை அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித்தலைவர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் என அனைவரும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதே போன்று உத்திரபிரதேச மாநிலம் வதோதராவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். வதோதரா நகரில் குதிரை ரேஸ் மைதானத்தின் அருகேயுள்ள ஜி.ஈ.பி. சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வதோதரா நகர மேயர் பாரத் தன்கர், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, உள்ளூர் பா.ஜ.க. எம்.பி. ராஜன்பென் பாட், பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோகேஷ் பட்டேல் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
எஸ்சி, எஸ்டி ஊழியர் சங்கம்
அதே சமயத்தில் பரோடா பல்கலைக்கழகத்தில் மஹாராஜா சாயாஜிராவ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தாகூர் சோலங்கி தன்னுடைய ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்திருந்தார். இந்த ஊழியர்கள் அமைப்பு எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்தததாகும்.
போலீசுடன் வாக்குவாதம்
ஆனால் மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்கள் மாலை அணிவிக்க வந்ததால் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மேனகா காந்தி உள்ளிட்ட பாஜகவினர் வந்த போது அவர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். மேலும் தங்களை முதலில் அனுமதிக்க வேண்டும் என்று தாகூர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
மரியாதை செலுத்திய மேனகா காந்தி
எனினும் பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர் மேனகா காந்தி உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்புடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்றனர். அவர்கள் மாலை அணிவித்து விட்டு சென்ற பின்னர் தாகூர் சோலங்கி மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டார்.
அம்பேத்கர் சிலை மாசடைந்துவிட்டது
இதனையடுத்து அம்பேத்கர் சிலைக்கு பால் மற்றும் தண்ணீரை ஊற்றி தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தப்படுத்தினர். பாஜகவினர் வந்து அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு சென்றதால் அந்த இடம் மாசடைந்துவிட்டதாகக் கூறி அவர்கள் இவ்வாறு செய்தனர்.
அம்பேத்கர் சிலையை சுத்தப்படுத்திய மக்கள்
"அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த நாங்கள் முன்கூட்டியே வந்த போதும் பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி எங்களை தடுத்து நிறுத்தினர். பாஜக தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்ததால் அந்த சுற்றுச்சூழல் மாசடைந்ததாலேயே பால் மற்றும் தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்திவிட்டு நாங்கள் மீண்டும் மாலை அணிவித்தோம்" என்று தாகூர் சோளங்கி கூறியுள்ளார்.