தலித் வாலிபருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற செங்கல் சூளை அதிபர்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் அவரின் ஊழியர்கள் 2 பேர் சேர்ந்து அடித்து, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள தபவ்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விரேந்தர் குமார் மிஷ்ரா. அதே கிராமத்தில் செங்கல் சூளை வைத்துள்ளார். அவரது செங்கல் சூளை அருகே உள்ள நிலத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று மிஸ்ரா திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்த காரணத்தால் மிஸ்ரா அந்த நிலத்தின் உரிமையாளரிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மிஸ்ரா தனது செங்கல் சூளையில் வேலை செய்யும் இருவருடன் சேர்ந்து பக்கத்து நிலத்தின் உரிமையாளரின் பதின்வயது மகனை அடித்து நொறுக்கி செருப்பு மாலை அணிவித்துள்ளார்.
செருப்பு மாலையுடன் தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த வாலிபரை அவர் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த வாலிபரின் தந்தை இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் மிஸ்ரா மற்றும் அவரது ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.