பாஜகவிற்கு சவாலாக இருக்கும் ஜிக்னேஷ்... மனு தாக்கல் செய்த நாளிலேயே வாரண்ட் பிறப்பிப்பு!
Recommended Video
அஹமதாபாத்: குஜராத் தேர்தலில் வட்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் தலித் உரிமைகளுக்கான போராளி ஜிக்னேஷ் மேவானி மீது வேட்பு மனு தாக்கல் செய்த நாளன்றே ஜாமினில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலித் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக செயற்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி, குஜராத் சட்டசபை தேர்தலில் பனஸ்கந்ததா மாவட்டம் வட்கம் தொகுதியில் தனித்து களமிறங்கிறார். இதற்கான வேட்பு மனு தாக்கலை அவர் நேற்று செய்துள்ளார். வேட்பு மனு தாக்கலுக்கான பணிகளில் இருந்ததால் ஜிக்னேஷ் வழக்கு ஒன்றின் விசாரணக்கு நேரில் ஆஜராகவில்லை.
கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் இருந்து அஹமதாபாத் வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ஜிக்னேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர் இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாநில அரசின் சார்பில் ஆடம்பரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குஜராத் மாநாட்டை கண்டித்து இந்த ரயில் மறியல் நடைபெற்றது.
விசாரணைக்கு ஆஜராகவில்லை
ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜிக்னேஷ் மீது வழக்கு பதியப்பட்டது, இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் நேற்று வழக்கு விசாரணையின் போது ஜிக்னேஷ் நேரில் ஆஜராகவில்லை, அவர் சார்பில் ஆஜராக வழக்கறிஞர் ஜிக்னேஷ் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கும்படி கோரினார்.
நீதிமன்றம் நடவடிக்கை
ஆனால் இதனை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட், ஜிக்னேஷ் உள்ளிட்ட 12 பேர் மீது ஜாமினில் வெளிவரமுடியாத வாரண்ட்டை பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜிக்னேஷ், எங்கள் தரப்பு வாதம் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்தே வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்க கோருவேன்
"வழக்கறிஞரான நான் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறேன். நீதிமன்றத்தின் முன்பு ஆஜராகி, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன். நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்று ஜிக்னேஷ் கூறியுள்ளார்.
மிகப்பெரிய பேரணி
பசுத்தோலை எடுத்துச் சென்றதாக கடந்த ஆண்டு தலித் இளைஞர்கள் 7 பேர் தாக்கப்பட்டதை கண்டித்து அஹமதாபாத்தில் இருந்து உனாவிற்கு தலித் பெருமை பேரணி ஒன்றை ஜிக்னேஷ் நடத்தினார். இந்தப் பேரணியில் பெண்கள் உள்பட 20 ஆயிரம் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது முதல் தலித் சமூகத்திற்காக போராடும் ஆர்வலராக ஜிக்னேஷ் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவராக உருவாகிய ஜிக்னேஷ்
படிதார் இன மக்களுக்காக போராடும் ஹர்திக் படேல் மற்றும் அல்பேஷ் தாக்கூர் போல ஜிக்னேஷ் மேவானியும் குஐராத் அரசியல் களத்தில் புதிதாக அடியெடுத்து வைக்கிறார். குஜராத் மாநிலத்தில் தலி சமூகத்திற்காக இதுவரை யாரும் குரல் எழுப்பாத நிலையில் ஜிக்னேஷ் நடத்திய பேரணி தலித் மக்களிடையே அவரை புதிய தலைவராக உருவாக்கியுள்ளது.