டிவி வருமானம் மூலம் பிசிசிஐயின் பொருளாதாரத்தை வளமாக்கியவர் டால்மியாதான்.. ஜெட்லி புகழாரம்
டெல்லி: மறைந்த ஜக்மோகன் டால்மியாக மிகத் திறமையான நிர்வாகி. கிரிக்கெட்டின் இல்லமாக இந்தியாவை மாற்றிய பெருமைக்குரியவர் டால்மியா என்று மத்திய நிதியமைச்சரும், கிரிக்கெட் நிர்வாகிகளில் ஒருவருமான அருண் ஜேட்லி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஹாங்காக்கில் தற்போது உள்ள ஜெட்லி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
சிறந்த நிர்வாகி
கிரிக்கெட் உலகம் ஒரு சிறந்த நிர்வாகியை இழந்துள்ளது. இந்தியாவை கிரிக்கெட்டின் இல்லமாக மாற்றிய பெருமைக்குரியவர் டால்மியா. தனிப்பட்ட முறையில் எனது நண்பரை நான் இழந்துள்ளேன்.
விதி வேறு மாதிரி நினைத்து விட்டது
கடைசியாக அவரை நான் கடந்த மாதம் கொல்கத்தாவில் சந்தித்தேன். தேறி விடுவோம் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார். ஆனால் விதி வேறு மாதிரியாக முடிவு செய்து விட்டது.
பேரிழப்பு
டால்மியாவின் மரணம் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்திற்கும், அவரது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்.
தனிப்பட்ட இழப்பு
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவருடன் நெருங்கிப் பழகி வந்த எனக்கு இது தனிப்பட்ட முறையிலும் பெரும் இழப்பாகும். நல்ல நண்பரை இழந்துள்ளேன்.
டால்மியா
இந்திய கிரிக்கெட்டிற்கு வருவாய் பெருக வழி வகுத்தவர் டால்மியா. நாம் நடத்தும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை நாமே பெறும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் டால்மியா.
90களின் தொடக்கத்தில்
90களின் தொடக்கத்தில் அவரை நான் முதல் முறையாக சந்தித்தேன். அப்போதுதான் ஐஎஸ் பிந்த்ராவையும் சந்தித்தேன். பிசிசிஐக்கு மட்டுமே கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் அதிகாரம் இருப்பதை அவர் மத்திய அரசுடன் போராடி வென்றார் டால்மியா.
டிவி மூலம் காசு பார்த்தவர்
டிவி உரிமை மூலம் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிகப் பெரிய வருவாய் கிடைக்கும் வழியையும் அவரே உருவாக்கினார். அதை கிரிக்கெட் உலகம் மறக்க முடியாது.
இவரால்தான் சாத்தியமாயிற்று
டால்மியா, பிந்த்ரா ஆகியோரின் போராட்டத்தால்தான் இந்தியாவில் சுதந்திரமான முறையில் நேரடி ஒளிபரப்பு என்பது சாத்தியமாயிற்று. டிவிகளில் சுதந்திரமாக பேசுவதும் சாத்தியமாயிற்று.
டால்மியாவே முழுக் காரணம்
டிவி மூலம் கிடைத்த வருவாய் பிசிசிஐயின் பொருளாதாரத்தை வளப்படுத்தியது, வலிமையாக்கியது. இதற்கு டால்மியாதான் முழுக் காரணம் ஆவார் என்றார் ஜெட்லி.