சசிதரூருக்கு சிக்கல்.... சுனந்தா புஸ்கர் மரணம் இயற்கையானது அல்ல- டெல்லி போலீஸ் கமிஷனர்
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஷி கூறியுள்ளார். இதனால் சசிதரூர் கைது செய்யப்பட்டக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி சசிதரூரின் 51 வயது மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெகர் தராருடன் சசி தரூருக்கு தொடர்பு இருந்தாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுனந்தா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. போலோனியம் என்ற கதிரியக்க பொருளால் சுனந்தா கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.
சுனந்தா மரணம் தொடர்பாக சசி தரூரின் உதவியாளர் நாராயண் சிங், ஓட்டுநர்கள் பஞ்ரங்சி, சஞ்சய் தீவான் சசி தரூர் , சுனந்தாவின் இரு நண்பர்கள் மற்றும் சசி தரூர் உள்ளிட்ட 6 பேரிடம் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஷி நேற்று அளித்த பேட்டி:
சசிதரூர் மனைவி சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் சுனந்தா புஷ்கர் விஷத்தால் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் என்ன விஷம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி இங்கு இல்லை.
இதனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுனந்தாவின் உள்ளுறுப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் வாஷிங்டன் நகரில் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் இருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல . அதேவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் தன்மையுடைய போலோனியம் என்ற கதிர்வீச்சு பொருள் அவரது உடல் உறுப்புகளில் இல்லை.
இவ்வாறு பாஷி கூறினார்.
இதனைத் தொடர்ந்து சசிதரூர் கைது செய்யப்படக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.