”காஷ்மீர் பஜார்”- தப்பிவந்த பெண்ணின் துணிச்சலால் ஆக்ரா விபச்சார விடுதியில் இருந்து 21 பெண்கள் மீட்பு
ஆக்ரா: ஆக்ராவில் விபச்சார விடுதியில் சிக்கித் தப்பிவந்த இளம்பெண்ணின் முயற்சியால் அவ்விடுதியில் தவித்த மகராஷ்டிராவைச் சேர்ந்த 5 பெண்கள் உள்பட 21 பேரை போலீசார் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நவிமும்பை நெரூல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு கடத்தப்பட்டு கட்டாய விபசாரத்தில் தள்ளப்பட்டார்.
அங்கு நரக வேதனையை அனுபவித்த அந்த பெண் பல முறை தப்பிக்க முயன்றும் பலனில்லை. இந்த நிலையில், வாடிக்கையாளர் ஒருவரின் உதவியுடன் அப்பெண் அங்கிருந்து தப்பி ரயில் மூலம் நவிமும்பையில் உள்ள தன் வீட்டுக்கு வந்தார்.
தந்தையும் இறந்த சோகம்:
வீட்டிற்கு வந்து தன்னுடைய அம்மாவை கட்டிப்பிடித்து கதறி அழுதார். மேலும் வீட்டில் தனது தந்தையின் படத்தில் மாலை அணிவித்துள்ளதை கண்டு அழுது புலம்பினார். தான் பிரிந்து சென்ற வேதனையில், தந்தை நோய்வாய்பட்டு இறந்தது அப்போது தான் அவருக்கு தெரியவந்தது.
மர்தானி படத்தின் பாதிப்பு:
இந்த நிலையில் சமீபத்தில் அவர் டி.வி.யில் "மர்தானி" என்ற ராணி முகர்ஜி நடித்த திரைபடத்தை பார்த்தார். தனக்கு நேர்ந்த அதே கொடுமை அந்த படத்தில் ராணி முகர்ஜியின் தோழிக்கு நேர்ந்ததையும், அவர் துணிச்சலாக செயல்பட்டு அவரை மீட்டதையும் கண்டு அந்த பெண் வைராக்கியம் அடைந்தார்.
கிட்டதட்ட 21 பெண்கள்:
தன்னை போல் ஆக்ரா விபசார விடுதியில் 21 பெண்கள் அடைக்கப்பட்டு இருப்பதை தன்னுடைய தாயார் மூலம் நெரூல் போலீசாருக்கு தெரியப்படுத்தினார். பின்னர், போலீசார் அந்த பெண்ணை அழைத்து கொண்டு ஆக்ரா விரைந்தனர். அவர் கூறிய முகவரியில் அடைக்கப்பட்டு இருந்த 21 பெண்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.
4 பேர் கைது:
மேலும், அந்த விபசார விடுதியை நடத்தி வந்த பெண்ணான பர்வீன் கான் மற்றும் ஸ்ரீமான் தாமன், பீர்பகாதூர், பப்பு பபூல்கால் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பெண்களில் 5 பேர் மகராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீதி 16 பேரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
துணிச்சலால் கிடைத்த வாழ்வு:
அவர்களை அவர்களுடைய குடும்பத்தினருடன் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துணிச்சலாக அப்பெண் செயல்பட்டதால் 21 பெண்களின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
யாரையும் நம்பாதீங்க:
மீட்கப்பட்ட அனைத்து பெண்களுமே 11 அல்லது 14 வயதில் கடத்தப்பட்டு, 2ல் இருந்து 3 லட்ச ரூபாய்க்கு ஏஜெண்டுகளால் விற்கப்பட்டுள்ளனர் என்பதும் வெளிவந்துள்ளது.