என் அப்பாவை கொன்ற 50 பாக். வீரர்களின் தலையை துண்டிக்க வேண்டும்.. மகள் ஆவேசம்
தனது தந்தையின் உயிர்த்தியாகத்திற்கு இணையாக பாகிஸ்தானை சேர்ந்த 50 பேரின் தலையை துண்டிக்க வேண்டும் என்று உயிர்நீத்த ராணுவ வீரரின் மகள் கூறியுள்ளார்.
டெல்லி: இந்திய ராணுவ வீரர்களைக் கொன்று அவர்களின் தலைகளை துண்டித்ததற்கு சன்மானமாக 50 பாகிஸ்தானியரின் தலைகளை கொய்ய வேண்டும் என்று பாகிஸ்தானால் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் மகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று காலை இந்திய எல்லைக்குள் சுமார் 250 மீட்டர் தூரம் ஊடுருவி வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இரண்டு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றதோடு, இரண்டு ராணுவ வீரர்களின் தலையை துண்டித்து உடலை சிதைத்து, வெறித்தனமான முறையில் நடந்து கொண்ட செயல் அதிர வைத்துள்ளது.
கோழைத்தனமான இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலை துண்டித்து கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் பரம்ஜித்சிங், பிரேம்சாகர் என்று தெரிய வந்தது. அவர்களது உடல் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரேம்சாகர் எல்லை பாதுகாப்புப் படையில் தலைமை காவலராக பணியாற்றியவர்.
பிரேம்சாகர் தலை துண்டித்து கொல்லப்பட்ட தகவல் அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்ட போது, தந்தை கொடூரமான முறையில் கொல்லப்பட்ட செய்தியே கேட்ட பிரேம்சாகரின் மகள் சரோஜ், தன்னுடைய தந்தை செய்த தியாகத்திற்கு பதிலடி கொடுக்கப்பட்டே தீர வேண்டும் என்று கதறினார். 'என் தந்தை படுகொலைக்கு சன்மானமாக பாகிஸ்தானை சேர்ந்த 50 பேரின் தலையை கொய்தால் தான், அவரின் தியாகத்தை ஈடு செய்ய முடியும் என்றும் சரோஜ் கண்ணீர் விட்டார்.