குஜராத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட இஷ்ரத் தீவிரவாதிதான்.. ஹெட்லி மீண்டும் திட்டவட்டம்
மும்பை: குஜராத் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட இளம் பெண் இஷ்ரத் ஜஹான் ஒரு தீவிரவாதி என்று தேசிய புலனாய்வு அமைப்பிடம் தான் கூறியிருந்ததாகவும், அதை ஏன் அவர்கள் பதிவு செய்யவில்லை என்று தெரியவில்லை என்றும் தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிக்கு, மும்பை தாக்குதலில் தொடர்புள்ளது தெரியவந்தது. இந்திய தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்த நிலையில், மும்பை நீதிமன்றத்திற்கு வீடியோகான்பரன்ஸ் மூலம் சாட்சியமளித்து வருகிறார் ஹெட்லி.
இன்று நான்காவது நாளாக நடைபெற்ற குறுக்கு விவாதத்தில், இஷ்ரத் ஜஹான் தனக்கு நேரடி பரிட்சையம் இல்லை என்றும், செய்தித்தாள் செய்திகள் மூலமாக அவர் பற்றி அறிந்ததாகவும் ஹெட்லி தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், இஷ்ரத் ஜஹான் ஒரு தீவிரவாதி என்று என்.ஐ.ஏவிடம் வழங்கிய வாக்குமூலத்தில் நீங்கள் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஹெட்லி, நான் என்.ஐ.ஏவிடம் இந்த தகவலை சொன்னேன். அவர்கள் எழுதியிருப்பார்கள் என்று நினைத்தேன். எழுதியதை அவர்கள் எனக்கு திரும்ப படித்தும் காட்டவில்லை. அவர்கள் ஏன் அதை எழுதவில்லை என்பதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.
மேலும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத குழுவில் பெண்கள் தீவிரவாத பிரிவும் இருப்பதாகவும், அபு அய்மான் என்பவரின் தாய், இந்த தீவிரவாத குழுவிற்கு தலைவி எனவும் ஹெட்லி கூறியுள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்த மோடியை கொலை செய்யும் திட்டத்தோடு ஊடுருவிய இஷ்ரத் உள்ளிட்ட லஷ்கர் தீவிரவாதிகளை குஜராத் போலீசார் என்கவுண்டர் செய்தனர். ஆனால், வேண்டுமென்றே தனது மகளை கொலை செய்துவிட்டதாக இஷ்ரத் பெற்றோர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் ஹெட்லியும், இஷ்ரத்தை தீவிரவாதி என திரும்பவும் கூறியுள்ளது, குறிப்பிடத்தக்கது.