ஒரு வருடமாக கராச்சியில் தங்கியுள்ளார் தாவூத்.. சோட்டா ராஜன் தகவல்
டெல்லி: கடந்த ஒரு வருடமாக தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சோட்டா ராஜன் கூறியுள்ளார்.
அவருக்கு ஐஎஸ்ஐ பாதுகாப்பு அளித்து வருவதாகவும், பலத்த பாதுகாப்பின் கீழ் தாவூத் தங்கியிருப்பதாகவும் சோட்டா ராஜன் மேலும் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் அவர் இந்திய செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக ஒரே இடத்தில்தான் தாவூத் இப்ராகிம் தங்கியிருப்பதாக சோட்டா ராஜன் கூறியுள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது.
தாவூத், பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ பாதுகாப்பில் இருந்து வருவது உறுதியான தகவல்தான் என்ற போதிலும் தற்போது சோட்டா ராஜன் கூறியிருப்பதன் மூலம் அது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பயத்தில் தாவூத்
இதுகுறித்து சோட்டா ராஜன் மேலும் கூறுகையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜீத் தோவல் நியமிக்கப்பட்ட பின்னர் தாவூத்தின் நடமாட்டத்தை ஐஎஸ்ஐ குறைத்து விட்டது. அவரது உயிருக்கு இந்தியாவால் ஆபத்து ஏற்படும் என அது அஞ்சியது. தாவூத்தும் கூட அஞ்சினார். இதனால்தான் கராச்சியிலேயே அவரை தங்க வைத்துள்ளனர் என்றார் அவர்.
கராச்சியில்
கராச்சியில் உள்ள கிளிப்டன் பகுதியில் உள்ள வீ்ட்டில்தான் தாவூத் இப்ராகிம் பலத்த பாதுகாப்புடன் தங்கியிருக்கிறாராம். இதையும் சோட்டா ராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
நடமாட்டம் இல்லை
தாவூத் குறித்து உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில், தாவூத் இப்ராகிமை தொடர்ந்து இந்திய உளவுத்துறை கண்காணித்து வருகிறது. இதனால் அவரது நடமாட்டம் முற்றிலும் நின்று விட்டது. அவர் வீட்டை விட்டு வருவதே இல்லை. கோட்டை போன்ற வீட்டில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் வசித்து வருகிறார்.
செயல்பாடுகள் தொடர்கின்றன
தாவூத்தின் நடமாட்டம்தான் குறைந்து போயுள்ளதே தவிர அவரது செயல்பாடுகள் அப்படியேதான் உள்ளது. அவரது தொழிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஐஎஸ்ஐக்கு அவர் மிகப் பெரிய சொத்து. இதன் காரணமாக அது அவரைப் பாதுகாத்து வருகிறது. தனது வருவாயிலிருந்து பெரும் தொகையை அவர் ஐஎஸ்ஐக்கு கொடுத்து வருகிறார். கப்பத்தை சரியாக கட்டி வருவதால் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறது ஐஎஸ்ஐ. என்றார் அவர்.