ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: தாவூத், சோட்டா ஷகீல் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு
டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிழல் உலக தாதாக்களான தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ஷகிலை தேடப்படும் குற்றவாளிகளாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டீலா ஆகிய வீரர்கள், சூதாட்டத் தரகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நிழல் உலக தாதாக்களான தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியே இந்த ஐபிஎல் சூதாட்டம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி சிறப்புப் போலீசார், ‘கடந்த 1993-ஆம் ஆண்டில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, மும்பையில் உள்ள தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் ஆகியோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தையடுத்து அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது' எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் ஆகியோரையும், இந்த வழக்கில் போலீஸாரால் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சந்தீப் சர்மாவையும் தேடப்படும் குற்றவாளிகளாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அறிவித்தார்.