5 வருஷத்துக்கு முன்னாடியே தாவூத் "ரிடையர்ட்" ஆகிட்டாராமே!
டெல்லி: தாதா தாவூத் இப்ராகிம் இன்று தனது 60வது பிறந்த நாளையொட்டி தனது "தொழிலை" இன்னொருவரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொழிலிலிருந்து விலகி "ஓய்வு"க்குப் போய் விட்டதாக உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.
கடந்த ஐந்து வருடமாக அவரது நெருங்கிய உதவியாளரான சோட்டா ஷகீலும், தம்பி அனீஸ் இப்ராகிமும் இணைந்துதான் தாவூத்தின் தொழிலைக் கவனித்துக் கொள்கிறார்களாம்.
கடந்த ஐந்து வருடமாக தாவூத் எந்த தொழிலிலும் ஈடுபடவில்லையாம். அவர் ஆக்டிவாகவும் இல்லையாம். 20 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட தாவூத் படம்தான் இன்று வரை அனைவரிடமும் உள்ளது. அந்த தாதாவாக இப்போது தாவூத் இல்லை என்று இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தாவூத் இப்ராகிமால் சுயமாக நடக்க முடியாதாம். 2 பேர் சேர்ந்து தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் நடக்கிறாராம். அவரது உடல் நிலை மோசமாகி வருகிறதாம். 6 வருடமாகவே அவரது நடமாட்டம் கிட்டத்தட்ட முடங்கிப் போயுள்ளதாம்.
போக்கா ஹாரமுடன் ஒப்பந்தம்
3 வருடங்களுக்கு முன்பு அபாயகரமான தீவிரவாத இயக்கமான போக்கா ஹாரமுடன் தாவூத் கும்பல் போதைக் கடத்தல் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளது. அதில் தாவூத் இப்ராகிம் கலந்து கொள்ளவில்லையாம். காரணம், அவருக்கு உடம்பு சரியில்லையாம்.
அனீஸ் இப்ராகிம் முன்னிலையில்
இந்த ஒப்பந்தம் குறித்த அனைத்து வேலைகளையும் அனீஸ் இப்ராகிம்தான் மேற்கொண்டாராம். போக்கா ஹாரம் தலைவர்களைச் சந்தித்துப் பேசியது உள்பட அனைத்து வேலைகளையும் அவர்தான் பார்த்துக் கொண்டாராம்.
நைஜீரியாவில் நடந்த சந்திப்பு
3 வருடங்களுக்கு முன்பு அனீஸ் இப்ராகிம் நைஜீரியா போயுள்ளார். அங்கு போக்கா ஹாரம் தலைவர் அபு பக்கீர் ஷேக்குவைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போதுதான் இந்த டீல் முடிவானதாம்.
இந்தியாவுக்கும் போதை மருந்து சப்ளை
இந்த ஒப்பந்தப்படி இரு கும்பலும் சேர்ந்து உலக அளவில் பல்வேறு நாடுகளில் போதை மருந்துகளை சப்ளை செய்யுமாம். அதேபோல இந்தியாவிலும் விற்பார்களாம்.
இந்தியா - துபாய் இன்சார்ஜ் ஷகீல்
அதேபோல இந்தியா மற்றும் துபாய் தொடர்பான விவகாரங்களை சோட்டா ஷகீல் பார்த்துக் கொள்கிறாராம். துபாயிலும், இந்தியாவிலும் ரியல் எஸ்டேட் டீல்களை இவர்தான் பார்த்துக் கொள்கிறாராம். மேலும் ஆள் கடத்தல், பணம் பறித்தல் போன்ற வேலைகளையும் இவர்தான் பார்த்துக் கொள்கிறாராம். சமீபத்தில் பரூச்சில் இரண்டு பாஜக தலைவர்கள் கொல்லப்பட்டதற்கும் சோட்டா ஷகீல்தான் காரணமாம்.
ஓய்வு அறிவிப்பு ஏன்?
நிலைமை இப்படி இருக்க இன்று தாவூத் இப்ராகிம் ஓய்வு பெறப் போவதாக வந்த அறிவிப்பு குறித்து இந்திய தரப்பு கேள்விக்குறியுடன் உள்ளது. இதன் பின்னணி என்ன என்றும் தெரியவில்லை.
மெக்கா போகப் போகிறாரா
தனது ஓய்வை அறிவித்த பின்னர் தாவூத் இப்ராகிம் மெக்காவுக்குப் போகப் போவதாக சொல்கிறார்கள். ஆனால் பல நாட்டவர் சந்திக்கும் புனித நகரான மெக்காவில் தாவூத்தை யாரும் தொட முன்வர மாட்டார்கள் என்றும் தாவூத் தரப்பு கருதுகிறதாம்.
டென்ஷனைக் குறைக்கும் முயற்சி
இருப்பினும் தன் மீதான டென்ஷனைக் குறைத்து பதட்டம் குறைந்து சற்று அமைதியுடன் வாழ தாவூத் விரும்புவதாக தெரிகிறது. ஆனால் இந்தியாவுக்கு தாவூத் தொடர்ந்து முக்கியமானவராகவே தொடர்வார் என்பதில் சந்தேகம் இல்லை.