10 நாடுகளில் ரூ.3,000 கோடி சொத்துக்கள் வைத்திருக்கும் தாவூத் இப்ராஹிம்: எல்லாம் பினாமி பெயரில்
டெல்லி: தாதா தாவூத் இப்ராஹிமுக்கு 10 நாடுகளில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
தாதா தாவூத் இப்ராஹிமுக்கு 10 நாடுகளில் உள்ள முக்கியப் பகுதிகளில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் 50 சொத்துக்கள் இருப்பது குறித்து அமலாக்கத் துறை விசாரணை
நடத்தி வருகிறது. முதலில் தாவூதின் கையாளான இக்பால் மிர்ச்சி லண்டனில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
சொத்து விவரம் தொடர்பாக பிற நாடுகளுக்கும் குழுக்களை அனுப்ப உள்ளது அமலாக்கத் துறை.
லண்டன்
தாவூத் இப்ராஹிம் கும்பல் லண்டனில் தான் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. அதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் அதிகம் முதலீடு செய்துள்ளது தாவூத் கும்பல்.
இங்கிலாந்து
தாவூதின் சொத்துக்கள் குறித்து இங்கிலாந்தில் விரிவான விசாரணை நடத்த உள்ளோம். சொத்துக்கள் குறித்த விவரங்கள் கேட்டு இங்கிலாந்து அதிகாரிகளுக்கு கடிதம்
எழுதியுள்ளோம் என்று அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு இறந்த இக்பால் மிர்ச்சி தான் தாவூத் சார்பில் இங்கிலாந்தில் சொத்துக்கள் வாங்கியவர்.
அமீரகம்
மொராக்கோ, ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், தாய்லாந்து, சைப்ரஸ், துருக்கி, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் தாவூதுக்கு சொத்துக்கள் உள்ளது. தாவூதின் சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி ஆகும்.
பினாமி
தாவூத் அனைத்து சொத்துக்களையும் பினாமி பெயர்களில் வாங்கியுள்ளார். இக்பால் மிர்ச்சி மும்பை மற்றும் இங்கிலாந்தில் அதிக அளவில் தாவூதுக்கு முதலீடு செய்துள்ளார். மும்பையில் 6 சொத்துக்களில் மிர்ச்சி மற்றும் அவரது உதவியாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
மும்பை
மும்பையில் தாவூத் கும்பல் அதிக அளவில் சொத்துக்கள் வாங்கியுள்ளது. சொத்துக்களின் விவரம், வங்கி பண பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 20 வங்கி கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தாவூதுக்கு உதவி செய்ய பணி பரிமாற்றம் செய்த 30 நிறுவனங்கள் பற்றியும் ஆய்வு நடந்து வருகிறது.
பணம்
தாவூதிடம் ஏகப்பட்ட பணம் இருப்பதால் தான் அவருக்கு பாகிஸ்தானில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் தாவூதின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தாவூத் இருக்குமிடம் எங்களுக்கு தெரியும் என்று இந்தியா பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது என்று உளவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துபாய்
தீவிரவாதத்திற்கு எதிராக சேர்ந்து போராடுவது என்று அமீரகம், இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தாவூத் துபாயில் அதிக அளவில் முதலீடு செய்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் மூலம் அவரின் நிதியை முடக்கலாம் என்று நம்பப்படுகிறது.