டெல்லியில் தாக்குதல் நடத்த தாவூத் இப்ராஹிம் சதி... உளவுத்துறை எச்சரிக்கை!
டெல்லி: மும்பபை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் டெல்லியில் உள்ள முக்கிய பகுதிகளில் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1993-ஆம் மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 237 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானோ தங்கள் நாட்டில் தாவூத் இப்ராஹிம் இல்லை என மறுப்பு தெரிவித்து வருகிறது. தாவூத் இப்ராகிம், இருப்பிடம் குறித்த பல்வேறு முக்கிய ஆவணங்களை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா அளித்துள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு அழுத்தத்தை கொடுத்து வருகிறது.
தாவூத் இப்ராஹிம் போலி கரென்சி, மற்றும் போதை மருந்துகளை இந்திய சந்தைக்குள் கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால் தற்போது இந்தியாவினுள் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உளவுத்துறை தீவிரவாதத்தை தடுக்க தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தாவூத் இப்ராஹிமின் டி-கம்பெனி சில இந்தியர்களை பணத்தால் விலைக்கு வாங்கி, டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கண்டறிந்துள்ளது. மேலும், தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய, புனேவை சார்ந்த சட்ட விரோத ஆயுத வியாபாரி ஒருவர், டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
டெல்லியில் ரயில் நிலையம், மெட்ரோ நிலையங்கள், சர்வதேச விமான நிலையம், மற்றும் மாநில சட்டசபை உள்ளிட்டவை அவர்களின் முக்கிய இலக்குகளாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இதனால், டெல்லியில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்ள்ளது.