ரூ. 32,000க்கு ஏலத்தில் எடுத்து தாவூத் இப்ராகின் காரை தீவைத்து எரித்த இந்து மகாசபா தலைவர்
மும்பை: தாதா தாவூத் இப்ராகிம் பயன்படுத்தி வந்த ஹூன்டாய் அசன்ட் காரை ரூ. 32,000க்கு ஏலத்தில் எடுத்து அதை தீவைத்து எரித்துள்ளார் இந்து மகாசபா தலைவர் சுவாமி சக்கரபாணி.
டிசம்பர் 9ம் தேதி தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டன. அதில்தான் இந்தக் காரை ரூ. 32,000 ஏலத்தில் எடுத்தார் சக்கரபாணி.
இன்று பிற்பகல் இந்தக் காரை அவர் தீவைத்து எரித்து விட்டார். டெல்லி அருகே காஸியாபாத்தில் பொதுமக்கள் மத்தியில் தீவைத்து எரிப்பேன் என்று ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று பிற்பகலில் கார் தீவைத்து எரிக்கப்பட்டது.
இதுகுரித்து அவர் கூறுகையில் இந்தக் காரைத்தான் தாவூத் இப்ராகிம் பல நாச வேலைகளுக்குப் பயன்படுத்தி வந்தார். எனவே இதை பொதுமக்கள் மத்தியில் எரிப்பேன் என்று கூறியிருந்தார் அவர். காஸியாபாத்தில் உள்ள இந்திரபுரம் என்ற இடத்தில் வைத்து இன்று பிற்பகலில் இந்தக் கார் எரிக்கப்பட்டது.
இதுகுறித்து சக்கரபாணி மேலும் கூறுகையில், இந்தக் காரை எரித்தது என்பது தாவூத் இப்ராகிமுக்கு செய்த இறுதிச் சடங்குக்குச் சமமாகும். அவரது கூலிப்படையினருக்கும் இது ஒரு எச்சரிக்கையாகும் என்றார்.
இந்தக் காரை முன்பு ஆம்புலன்ஸாக பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார் சக்கரபாணி. ஆனால் அதற்கு தாவூத் கும்பலிடமிருந்து எதிர்ப்பு வந்ததாக தெரிகிறது. இதையடுத்தே காரை தீவைத்து எரிக்க தீர்மானித்தாராம்.
இந்தக் கார் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில்தான் இருந்தது. மும்பையிலிருந்து சில நாட்களுக்கு முன்புதான் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது.