சோட்டா ராஜனை கொல்ல தாவுத் இப்ராஹிம் சதி... திஹார் ஜெயிலில் நடத்தப்பட்ட திடுக்கிடும் திட்டங்கள்!
திஹார் ஜெயிலில் கைதியாக இருக்கும் சோட்டா ராஜனை கொலை செய்ய தாவுத் இப்ராஹிம் திட்டம் தீட்டி இருக்கிறான்.
டெல்லி: திஹார் ஜெயிலில் கைதியாக இருக்கும் சோட்டா ராஜனை கொலை செய்ய தாவுத் இப்ராஹிம் திட்டம் தீட்டி இருக்கிறான். தற்போது இந்த திட்டம் போலீசுக்கு தெரிய வந்து இருக்கிறது.
இதன் காரணமாக திஹார் ஜெயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஜெயிலுக்குள் வந்து இருக்கும் நபர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்கு முன்பே இரண்டு முறை சோட்டா ராஜனை தாவுத் இப்ராஹிம் கொலை செய்ய முயற்சி செய்து இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பகை
ஒரு காலத்தில் சோட்டா ராஜனும், தாவுத் இப்ராஹிமும் நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். நிழல் உலகில் இவர்கள் கொடி ஒன்றாக பறந்து கொண்டு இருந்தது. பின் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். நிழல் உலகில் பெரிய தாதாவாக இருக்கும் இவர்களுக்குள் அன்றில் இருந்து இன்று வரை ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.
திட்டம் தோல்வி
சோட்டா ராஜனை தாவுத் இந்த இருபது வருடத்தில் இரண்டு முறை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறான். முதல் முறை சோட்டா ராஜன் அவனது நெருங்கிய நண்பனால் காட்டி கொடுக்கப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டான். சோட்டா ஷஹில் என்ற தாவூத்தின் ஆள்தான் இந்த செயலை செய்தது. அதற்கு அடுத்த முறை பாதியில் திட்டம் தெரிந்து சோட்டா ராஜன் எஸ்கேப் ஆனான். இப்படி இரண்டு முறையும் மெல்லிய இடைவெளியில் உயிர் பிழைத்தான் சோட்டா ராஜன்.
மீண்டும்
தற்போது சோட்டா ராஜன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான். 2016ம் ஆண்டு இவன் இந்தோனீசியாவில் கைது செய்யப்பட்டான். இவனை ஜெயிலிலேயே வைத்து கொலை செய்ய தாவுத் இப்ராஹிம் திட்டம் தீட்டி இருப்பது அம்பலம் ஆகி இருக்கிறது. இதற்காக தாவுத் ஆட்கள் ஜெயிலுக்கு கைதியாக வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கண்டுபிடித்தது எப்படி
அதே சிறையில் இருந்து சில நாட்கள் முன்பு வெளியே வந்த இன்னொரு தாதாவான நீரஜ் பாவனா மூலம் உளவுத்துறைக்கு இந்த தகவல் தெரிய வந்துள்ளது. நீரஜ் பாவனா தாவூத்தின் கொலை திட்டம் குறித்து தனது நண்பர்களிடம் போனில் பேசுவதை போலீஸ் உளவு பார்த்து இருக்கிறது. இந்த கொலை திட்டம் வெளியே தெரிந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.