சோட்டா ராஜன் கைது எதிரொலி.. தாவூத் பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்த பாகிஸ்தான்
டெல்லி: சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டு விட்டதால், தாவூத் இப்ராகிமுக்கு அளித்து வரும் பாதுகாப்பை பாகிஸ்தான் பலமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தாவூத் குறித்து சோட்டா ராஜனுக்கு பல தகவல்கள் தெரியும் என்பதால் தாவூத் குறித்த அனைத்து விவரங்களையும் அவர் சிபிஐயிடம் கூறி விடுவார் என்பதால் முன்னெச்சரிக்கையாக தாவூத்துக்கு அளித்து வரும் பாதுகாப்பை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
தாவூத் தற்போது வசித்து வரும் அவரது கராச்சி வீட்டுக்கு வெளியே கமாண்டோப் படையினரை பாதுகாப்புக்காக தற்போது குவித்து வைத்துள்ளதாம் பாகிஸ்தான் ராணுவம். இந்த கமாண்டோக்கள் ராணுவக் கமாண்டோக்கள் ஆவர்.
1993 தொடர் குண்டுவெடிப்பு சதிகாரன்
1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி தாவூத் இப்ராகிம். கட்த 20 வருடத்திற்கும் மேலாக இவர் பாகிஸ்தானில் அந்த நாட்டு அரசின் ஆதரவுடனும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும் ராணுவத்தின் பாதுகாப்புடனும் வசித்து வருகிறார்.
கராச்சியில்
இஸ்லாமாபாத், கராச்சி என பல இடங்களில் மாறி மாறி வசித்து வரும் தாவூத் இப்ராகிம் தற்போது கராச்சியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
சோட்டா ராஜன் கைது
இந்த நிலையில் தாவூத்தின் முன்னாள் கூட்டாளியும், தாவூத் குறித்து நன்கு அறிந்தவருமான சோட்டா ராஜன் சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் பாலி தீவில் வைத்து சிக்கினார்.
அதிர்ச்சியில் தாவூத்
சோட்டா ராஜன் கைது தாவூத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம், தாவூத் நெட்வொர்க் குறித்து பல முக்கிய விவரங்கள் சோட்டா ராஜனுக்குத் தெரியாமல் அவர் மூலமாக தாவூத் நெட்வொர்க்கை இந்தியா தகர்க்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் எழுந்துள்ளது.
உயிருக்கும் ஆபத்து
மேலும் சோட்டா ராஜன் மூலம் பெறும் தகவல்களை வைத்து தன்னை கொல்லவோ அல்லது அதிரடியாக உயிரோடு பிடிக்கவோ இந்திய உளவுத்துறை முயலலாம் என்ற அச்சமும் தாவூத்துக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே அச்சத்தில்தான் பாகிஸ்தான் ராணுவமும் உள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு
இதையடுத்து கராச்சியில் தாவூத் தங்கியுள்ள வீட்டில் கமாண்டோப் படையினரை குவித்துள்ளதாம் பாகிஸ்தான் ராணுவம். தாவூத் கராச்சியில் பாதுகாப்புடன் வசித்து வருவதை சோட்டா ராஜனும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் தாவூத்தைக் காக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளதாம் அந்த நாட்டு ராணுவம்.