திருப்பதி கோவிலுக்கு சென்று 'விஐபி' தரிசனம் செய்த தாவூத் இப்ராகிம் கூட்டாளி!
ஹைதராபாத்: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ஒருவர் வந்து சென்ற தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் அந்த நபர், விஐபிக்கள் தரிசனம் செய்யும் பகுதி வழியாக கோவிலுக்கு வந்து போயுள்ளார்.
இந்த தகவலால் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எப்படி விஐபி பாஸ் மூலம் தாவூத் கூட்டாளியை கோவிலுக்குள் அனுப்பினர், அனுப்பியது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கோவிலுக்கு வந்து போன நபர் தாவூத்துக்கு நெருக்கமான சோட்டா ஷகீல் குழுவைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ கலி முத்துகிருஷ்ண நாயுடு என்பவர்தான் இந்த தகவலை வெ்ளியிட்டுள்ளார். தாவூத் இப்ராகிமின் வலது கரமாக திகழ்பவர் இந்த சோட்டா ஷகீல் என்பது நினைவிருக்கலாம்.
வைகுண்ட ஏகாதசியன்று, லட்சக்கணக்கானோர் திருப்பதி கோவிலுக்கு வருகை தந்து வழிபட்டனர். அந்த நாளில்தான் மும்பையைச் சேர்ந்தவரான அஜய் நவந்தார் என்பவரும் கோவிலுக்கு வந்துள்ளார். இவர் சோட்டா ஷகீலின் நெருக்கமான கூட்டாளி என்று கூறப்படுகிறது. விஐபிக்கள் தரிசனம் செய்யும் பாதையில் இவர் போயுள்ளார். அதுவும் 2 முறை வருகை தந்துள்ளார்.
முதல் முறை தரிசனத்திற்கு வந்த நவந்தருடன் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சரான சச்சின் அஹிரும் வந்துள்ளார்.
2வது முறை தரிசனத்திற்கு வந்தபோது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட வந்துள்ளார்.
நவந்தர் கோவிலுக்கு வந்ததை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பப்பிராஜு உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் சோட்டா ஷகீலுக்கோ அல்லது தாவூத் இப்ராகிமுக்கோ நெருக்கமானவர் என்று தங்களுக்குத் தெரியாது என்று விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நவந்தரின் ரகசியத் தொடர்புகள் குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. முக்கியஸ்தர்கள் வந்த குழுவில் அவரும் இடம் பெற்றிருந்தார் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் முக்கியமான ஒரு தீவிரவாத குழுவின் தலைவருக்கு நெருக்கமான ஒரு நபரை எப்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அடையாளம் கண்டு கொள்ளாமல் விட்டது என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.