இந்திய வீரர்களுக்கு கார் வழங்க முன்வந்த தாவூத்- வெங்சர்க்கார் தகவலால் பரபரப்பு
1987ஆம் ஆண்டு ஷார்ஜாவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற போட்டிகள் நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு சற்று முன்னதாக இந்திய வீரர்கள் அறைக்குள் தாவூத் இப்ராகிம் நுழைந்தார். அவர் பாகிஸ்தானை நீங்கள் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றால் அனைவருக்கும் ஒரு டயோட்டா கார் பரிசாக வழங்குகிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் தாவூத் இப்ராகிம் கூறியதை ஒட்டுமொத்த அணியே நிராகரித்துவிட்டது என்று கூறியுள்ளார் வெங்சர்க்கார்.
இது குறித்து இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ் பதில் அளிக்கையில், ஷார்ஜாவில் போட்டி நடைபெற்ற போது ஒருநபர் வீரர்கள் அறைக்குள் சென்றது உண்மை. அவர் வீரர்களிடம் பேச வேண்டும் என்று கூறினார். ஆனால் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என்று நான் கூறிவிட்டேன். இதனைத் தொடர்ந்து எதுவும் சொல்லாமல் அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். பின்னர்தான் அவர் மும்பையைச் சேர்ந்த கடத்தல்காரர் என்றும் அவர் பெயர் தாவூத் இப்ராகிம் என்றும் தெரியவந்தது. இதைத் தவிர அங்கு வேறு எதுவும் நடக்கவில்லை.
கார் பரிசு கொடுப்பதாக கூறியது எதுவும் எனக்கு தெரியாது. வெங்சர்க்கார் அப்படி கூறியிருந்தால் அவர்தான் அதுபற்றி அதிகம் கூற வேண்டும் என்றார்.