ஜெ. அப்பீல் மனு விசாரணையில் அரசியலை நுழைக்க வேண்டாம்: க. அன்பழகன் வக்கீலுக்கு நீதிபதி குட்டு
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசியலை நுழைக்க வேண்டாம் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசனுக்கு தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி குட்டு வைத்தார்.
பெங்களூரு தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துகுவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
பின்னர் கடந்த அக்டோபர் 17-ந் தேதி இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.
மேலும் ஜெயலலிதாவுக்கு 4 மாதம் ஜாமீன் நீடிப்பு செய்து டிசம்பர் மாதம் 18-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படியும், அதற்காக தனி பெஞ்ச் நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
நீதிபதி பில்லப்பா
இதையடுத்து ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2-ந் தேதி ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விடுப்பில் இருந்ததால் வழக்கு விசாரணையை நேற்றைய தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பில்லப்பா உத்தரவிட்டு இருந்தார்.
விசாரணை தொடக்கம்
இதன்படி தனி பெஞ்ச் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கும், ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் குமாரும் ஆஜரானார்கள் மேலும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சு.சுவாமிக்கு உத்தரவு
அப்போது, இந்த வழக்கில் தாம் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார். ஆனால் இதை நிராகரித்த நீதிபதி குமாரசாமி, உச்சநீதிமன்றம் இது தொடர்பாக பிறப்பித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அன்பழகன் மனு
மேலும் சொத்து குவிப்பு வழக்கில் 3-வது நபராக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் குமரேசன் தெரிவித்தார். அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொள்ளாமல் நிறுத்தி வைத்ததுடன், அன்பழகனுக்கும், சொத்துகுவிப்பு வழக்குக்கும் உள்ள தொடர்பு குறித்து குமரேசனிடம் கேள்வி எழுப்பினார்.
3வது நபராக சேர்க்க கோரிக்கை
அப்போது வழக்கறிஞர் குமரேசன், அன்பழகன் தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் என்றும், சென்னையில் நடந்த சொத்துகுவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்ற காரணமாக இருந்தவர் என்றும், அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இந்த வழக்கில் 3-வது நபராக சேர்த்து கொள்ள வேண்டும் என்றும் பதில் அளித்தார்.
அரசியலை நுழைக்க வேண்டாம்..
உடனே நீதிபதி குமாரசாமி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டு இருப்பதாக கருதி மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். எனவே தனிநீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக தான் விசாரணை நடத்தப்படும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். இந்த வழக்கில் அரசியலை நுழைக்க வேண்டாம் என்றார்.
மேலும் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உதவ அன்பழகன் தரப்புக்கு வழங்கப்பட்ட அனுமதி, உயர்நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது என்று கூறிய நீதிபதி, அன்பழகனின் கோரிக்கை தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்குக்கு உத்தரவிட்டார்.