“ராவண்” குமார் விஸ்வாசுக்கு ஆதரவு.. மகளிர் ஆணைய பெண் உறுப்பினர் ராஜினாமா!
டெல்லி: கள்ளக்காதல் பிரச்சினையில் சிக்கியுள்ள ஆம் ஆத்மி தலைவர் குமார் விஸ்வாசுக்கு ஆதரவாக மகளிர் ஆணையத் தலைவியுடன் பெண் உறுப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசுக்கும், அக்கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதைத் தடுக்க குமார் விஸ்வாஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதனால் அந்த பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண், டெல்லி மகளிர் ஆணையத்தில் குமார் விஸ்வாஸ் மீது புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் ஆணையம் குமார் விஸ்வாஸ் அவருடைய மனைவி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. அவர்கள் 5 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
ஆனால் டெல்லி மகளிர் ஆணைய தலைவியும், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான பர்காசிங் முன்பாக குமார் விஸ்வாசும் அவருடைய மனைவியும் நேற்று ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து பர்கா சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அருகில் இருந்த மகளிர் ஆணைய உறுப்பினர் ஜூகி கான் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
‘‘மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது குமார் விஸ்வாசையும், ஆம் ஆத்மி கட்சியையும் அவமானப்படுத்தும் செயல். ஆணையத் தலைவி காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதற்காக ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்'' என்று கூறிக்கொண்டே அவர் அங்கிருந்து வெளிநடப்பும் செய்தார்.
அப்போது பர்கா சிங் கூறுகையில், "என் அருகில் இருந்தது ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர். சமீபத்தில்தான் அக்கட்சியில் இணைந்தார். அதனால்தான் விஸ்வாசுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்க்கிறார். அவரை நாங்கள் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைக்கவில்லை. இந்த சந்திப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடனேயே அவர் இங்கே வந்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.
மேலும் பர்கா சிங், ஆம் ஆத்மி கட்சியின் பெண் உறுப்பினர் மகளிர் ஆணையத்துக்கு கைப்பட எழுதிய புகார் கடிதத்தையும் நிருபர்களிடம் காண்பித்தார்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இப்பிரச்சினை குறித்து நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே எங்கள் அரசை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இதுபோல் சில ஊடகங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதனால், குமார் விஸ்வாஸ் குடும்பம் மிகுந்த மன உளைச்சலில் உள்ளது. இதுவா அரசியல்? இனி எங்களின் அரசின் செயல்பாடுகள் பற்றிய கேள்விகளுக்கு மட்டுமே நாங்கள் பதில் அளிப்போம்'' என்றார்.