பிரியங்கா காந்தியை மகளாக பார்க்கிறேன் என்ற மோடி 'கத்தரி' போட்ட டிடி
டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் பேட்டியை எடிட் செய்து அதில் பிரியங்கா காந்தி குறித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு கத்தரி போட்டதாக தூர்தர்ஷனுக்கு எதிராக சர்ச்சை வெடித்துள்ளது.
நரேந்திரமோடியிடம் சிறப்பு பேட்டியெடுத்த இந்திய அரசின் தூர்தர்சன் தொலைக்காட்சி, பேட்டியெடுத்து இருநாட்கள் கழித்து 27ம்தேதி அதை ஒளிபரப்பியது. அந்த பேட்டியின்போது பிரியங்கா காந்தியை தனது மகள்போல நினைப்பதாக மோடி கூறியது 'கட்' செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சில பத்திரிகைகளில் இப்போது செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "பிரியங்கா காந்தியை எனது மகள்போல நினைக்கிறேன். பிரியங்காவின் தாயைப்போல எனக்கு அவர் அரசியல் எதிரி கிடையாது. மகளுக்கு எதிராக கருத்து கூறுவதோ, அரசியல் நடத்துவதோ இந்திய கலாசாரம் கிடையாது" என்று மோடி தெரிவித்த கருத்துக்களை தூர்தர்சன் ஒளிபரப்பவில்லை. இத்தனைக்கும் இப்போதைக்கு பிரியங்கா காந்தியின் மோடி மீதான விமர்சனங்கள்தான் ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. மேலும் மோடியின் பேட்டியை வேண்டா வெறுப்பாக தூர்தர்சன் வெளியிட்டதாகவும் ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நரேந்திரமோடியின் பேட்டியை ஒளிபரப்ப இரு நாட்கள் காலதாமதம் செய்ததுடன், அதுகுறித்த எந்த ஒரு விளம்பரத்தையும் டி.டி செய்யவில்லை" என்று அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.
ஆனால் பேட்டியில் கத்தரி போடப்பட்ட விவகாரம் குறித்து தனது கவனத்துக்கு வரவில்லை என்று, பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி ஜவகர் சிர்கார் தெரிவித்தார்.