டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விசாரணை 'சட்டவிரோதம்'- கேஜ்ரிவால் அரசுடன் தொடரும் மத்திய அரசு பஞ்சாயத்து
டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக அம்மாநில அரசு விசாரணை நடத்துவது சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்திருப்பது புதிய பஞ்சாயத்தை உருவாக்கியுள்ளது.
நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைவராக இருந்த டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றது என்பது புகார். இது தொடர்பான விசாரணைக்கு டெல்லி மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்லி தலைமை செயலகம், முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகம் ஆகியவற்றில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது டெல்லி கிரிக்கெட் சங்கம் தொடர்பான கோப்புகளை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றிவிட்டதாகவும் கேஜ்ரிவால் புகார் கூறியிருந்தார்.
இதனிடையே முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால்சுப்பிரமணியன் தலைமையில் டெல்லி மாநில அரசு, கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்தது.
ஆனால் இதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், இந்த விசாரணை கமிஷனே சட்டவிரோதமானது; என்று உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு மற்றும் டெல்லி கேஜ்ரிவால் அரசு இடையேயான மோதல் முற்றி வருகிறது.