டிடிசிஏ முறைகேடு: விசாரணை அறிக்கையில் ஜெட்லி பெயரில்லை... கெஜ்ரிவால் மன்னிப்பு கோர பாஜக வலியுறுத்தல்
டெல்லி: டிடிசிஏ எனப்படும் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்திய நிபுணர் குழு அறிக்கையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் அருண் ஜெட்லி மீது வீண்பழி சுமத்திய கெஜ்ரிவால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி 13ஆண்டுகள் பதவி வகித்தார். அந்த கால கட்டத்தில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த கமிஷன் ஒன்றை டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.
இதற்கென டெல்லி கண்காணிப்புத் துறை முதன்மைச் செயலர் சேத்தன்சாங்கி தலைமையில், மூன்று பேர் குழுவை, டெல்லி அரசு நியமித்தது. விசாரணை முடிவில், 237 பக்க அறிக்கையை இக்குழு சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், எந்த இடத்திலும் அருண் ஜெட்லியின் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும், டிடிசிஏவில், பெரியளவில் முறைகேடுகள் நடந்துள்ளதை கருத்தில் கொண்டு, அதை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டுமென, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதனால் அருண் ஜெட்லி மீது கெஜ்ரிவால் வீண் பழி சுமத்தியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எம்.ஜே.அக்பர், "அமைச்சர் அருண் ஜெட்லி மீது அவதூறு பரப்பியதை நீதிமன்றத்திற்குச் சென்று கெஜ்ரிவால் ஒப்புக்கொள்ள வேண்டும். ஜெட்லி மீது குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், பொது மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தற்போது உண்மை வெளிவந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.