இரவில் இறந்தார்.. காலையில் உயிரோடு எழுந்தார்.. அடடே ஆச்சரியம்!
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் நேற்று முன்தினம் இரவு இறந்ததாக அறிவிக்கப்பட்டார். பின்னர் நேற்று காலை அவர் உயிரோடு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கிஷன் என்ற 72 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் வியாழக்கிழமை இரவு இவரை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினரும் மருத்துவமனைக்கு வந்து இறந்து போனவரின் தகவல்களை பதிவு செய்து கொண்டு சென்றனர். பின்னர் வெள்ளிக்கிழமை காலையில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட முதியவரை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக மார்ச்சுவரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரது உடலில் அசைவு தெரிந்துள்ளது.
இதைக் கண்ட மார்ச்சுவரி ஊழியர்கள் மருத்துவர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் உயிருடன் இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் இறந்து போன முதியவர் குறித்து விசாரணை நடத்த வந்த காவல் துறையினர் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட முதியவர் கிஷனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததை கண்டு திரும்பி சென்றனர்.
காவலர்கள் திரும்பி சென்ற பின்னரும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வெள்ளிக்கிழமை காலையில் அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மீண்டும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வியாழக்கிழமை இரவே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு நபர் காலையில் உயிரோடு இருந்துள்ளார் என்றால் அவர் இறந்து விட்டார் என்று தவறுதலாக மருத்துவர் அறிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க மருத்துவரின் தவறு. மருத்துவரின் கவனக் குறைவினால் அந்த முதியவருக்கு இரவு முழுவதும் சிகிச்சை கிடைக்கவில்லை.
இது மருத்துவரின் தவறு என்று காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பேசிய தலைமை மருத்துவர் ரோஷன் பணியில் அலட்சியமாக நடந்துக் கொண்ட மருத்துவர்கள் குறித்தும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரிக்கப்படும்' என தெரிவித்தார்.