போபால் தொடங்கி விசாகப்பட்டினம் வரை இந்தியாவை உலுக்கிய 6 விஷவாயு தாக்குதல் துயரங்கள்
விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் விஷ வாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இந்தியாவின் ஆறாத ரணமாய் இருப்பது போபால் விஷ வாயு கசிவு துயரம்தான்.
ஆந்திராவின் விசாகப்பட்டினம்.. அதிகாலைப் பொழுது இப்படி ஒரு பேரதிர்ச்சியானதாக இருக்கும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லைதான்.. கெமிக்கல் தொழிற்சாலை ஒன்றில் கசிந்த விஷவாயுதான் இந்த துயருக்கு காரணம்
தற்போது வரை 13 பேர் மரணித்து போயுள்ளனர்.. 5,000-க்கும் அதிகமானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசத்தையே இந்த துயரம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
5000 டன் டேங்குகள்.. லாக்டவுனால் வந்த வினை.. விசாகப்பட்டினம் விஷ வாயு விபத்துக்கு இப்படி ஒரு காரணமா?
போபால் விஷவாயு தாக்குதல்
விஷவாயு என்றதுமே இந்தியர்களின் இதயங்களை ஒருநிமிடம் நிற்க செய்துவிடும் 1984-ம் ஆண்டு போபாலில் நிகழ்ந்த விஷவாயு தாக்குதல். யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து கசிந்த விஷவாயு தாக்கி 3,787 பேர் மாண்டு போனதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதைப் போல 3 மடங்கு உயிரிழப்பு இருக்கவே வாய்ப்பு இருக்கிறது என்பதைத்தான் இன்றும் வாழும் போபால் விஷவாயு தாக்குதலின் சாட்சியங்கள் உறுதியாகச் சொல்கின்றன.
புனே குளோரின் கசிவு
2011-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் புனேவில் குளோரின் வாயு தாக்கியது. இதில் 20-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சுத்திகரிப்பு தொழிற்சாலையில்தான் இந்த குளோரின் வாயு தாக்கி இருந்தது.
பிலாஸ் ஸ்டீல் தொழிற்சாலை
2014-ல் 6 உயிர்களை பலி கொண்டது சத்தீஸ்கரின் பிலாஸ் ஸ்டீல் தொழிற்சாலை. இத்தொழிற்சாலையில் நச்சு வாயு வெளியேறி தொழிலாளர்களை நிலைகுலையச் செய்தது. 30க்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மும்பை ரத்னகிரி
2018-ம் ஆண்டு மும்பை ரத்னகிரியில் தொழிற்சாலை ஒன்றில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 14 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 2019-ல் புனேவில் மீண்டும் ஒரு நச்சுவாயுத் தாக்குதல் ஏற்பட்டு 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இப்போது விசாகப்பட்டினத்தில் அடுத்த துயரம் நிகழ்ந்திருக்கிறது.