இந்தியாவிலிருந்து மியான்மர் வழியாக தாய்லாந்துக்கு காரிலேயே போகலாம்: நிதின் கட்காரி
டெல்லி: இந்தியாவிலிருந்து மியான்மர் (பர்மா) மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு சாலை அமைக்க தேவையான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்பட உள்ளதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
இந்தியா டுடே ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று நிதின் கட்கரி பேசுகையில், கூறியதாவது: இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து நடுவே சாலை வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இன்னும் 15 நாட்களில், சாலை பணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம். இந்த ஒப்பந்தம் மூலம், தங்குதடையற்ற சாலை போக்குவரத்து சாத்தியமாகும்.
வங்கதேசம், பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சாலை இணைப்பு வசதி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தங்குதடையற்ற போக்குவரத்துக்கு உதவும் வகையிலான ஒப்பந்தங்களை இந்த நாடுகளுடன் செய்துகொண்டுள்ளோம்.
இந்தியாவின் 25 இடங்களில் இருந்து வங்கதேசத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டுவருகின்றன. ஆசியாவின் பிற நாடுகளோடு, இந்தியாவை சாலை மார்க்கமாக இணைப்பதற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. டெல்லி-பானிப்பட் நெடுஞ்சாலை ரூ.15 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகிறது. 400 நாட்களில் இந்த பணியை முடிக்க பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். டெல்லி-மீரட் நடுவேயான 90 கி.மீ தூரத்திற்கு 14 வழித்தட சாலை போடப்பட்டுள்ளது. இத்தனை வழித்தடங்கள் கொண்ட சாலை இந்தியாவில் இது மட்டுமேயாகும்.
வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்துவவது அரசின் முக்கிய நோக்கம். அந்த மாநிலங்களில் சாலை வசதி ஏற்படுத்த ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளோம். ஐந்து வருடங்களில் பணி முடிக்கப்படும். இவ்வாறு கட்காரி தெரிவித்தார்.