தொடரும் வியாபம் ஊழல் மர்ம மரணங்கள்: இன்று ம.பி மருத்துவக் கல்லூரி டீன் டெல்லியில் மரணம்
டெல்லி: வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தும் சிறப்பு குழுவுக்கு உதவி செய்து வந்த மத்திய பிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றின் டீன் இன்று காலை டெல்லியில் உள்ள ஹோட்டலில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் என்கிற வாரியத்தின் மூலம் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், பலரும் பணம் கொடுத்து எளிதில் அரசு வேலை வாய்ப்பு பெறுவதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.
இது குறித்து விசாரணை செய்ததில் பல கோடிக்கு ஊழல் நடந்ததும், அதில் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு குழுவுக்கு மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அரசு நடத்தும் என்.எஸ். மருத்துவ கல்லூரியின் டீனான டாக்டர் அருண் சர்மா(64) உதவி செய்து வந்தார். அதாவது நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் குறித்த விவரங்களை அவர் அதிகாரிகளுக்கு அளித்தார்.
அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அந்த கல்லூரியின் டீன் ஆக பதவியேற்றார். அவருக்கு முன்பு டீனாக இருந்த டாக்டர் டி.கே. சகலே கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது வீட்டில் வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று டெல்லிக்கு வந்த அருண் ஹோட்டல் அறையில் பிணமாகக் கிடந்தது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது படுக்கை அருகே விஸ்கி மற்றும் சில மருந்துகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். போலீசார் அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வியாபம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட மற்றும் சாட்சியங்களாக இருந்த 33 பேர் மர்ம முறையில் இறந்துள்ளனர். இந்நிலையில் வியாபம் ஊழல் குறித்து செய்தி சேகரித்த டிவி டுடே குழும செய்தியாளர் அக்ஷய் சிங் நேற்று மதியம் ஊழல் தொடர்பாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு குடும்பத்திடம் பேட்டி எடுத்துள்ளார். அதன் பிறகு அவர் திடீர் என இறந்துவிட்டார்.