டியர் வாசகர்களே, வாடி நிற்கும் விவசாயிகளுக்கு உதவி செய்யுங்களேன்!
பெங்களூர்: ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்து வரும் SayTrees என்ற என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்இந்தியா வாசகர்களிடம் உதவி கோரி நிற்கிறது.
தகவல் தொழில்நுட்ப தலைநகர் பெங்களூரில் சனி, ஞாயிறு என்றால் பலரும் நினைப்பது சினிமா, பொழுதுபோக்கு, நண்பர்களுடன் பப் சென்று குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, காவல்துறையினர் கெடுபிடி அதிகம் இருக்கும் என்பவையே. ஆனால் சில இளைஞர்கள் அணிசேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம் மரங்கள் நடுவது, நட்ட மரங்களை பராமரிப்பது, விவசாய தோழர்களுக்கு உதவி புரிவது என பன்முகத் தன்மை கொண்ட அணியாக வலம்வரும் இவர்களை குறித்தே இந்த கட்டுரை.
இவர்கள் SayTrees என்ற சமுதாய தொண்டு நிறுவனத்தின் இளைஞர்கள். மரங்கள் இப்புவியின் கரங்களென எடுத்துரைக்க பலருண்டு. மரங்களை வெட்டி பயன்படுத்துவோர் தான் மிகப்பெரிய அளவில் உள்ளனர். ஆனால் வெட்டுவதை தவிர்ப்பது இயலாத நிலை. நிழல் தரும் மரங்களை சாலையோரம் அசோகர் நட்டார் என வரலாற்றில் படித்து, அசோகரின் காலம் இந்திய அரசர்வழி காலங்களில் பொற்காலம் என்ற தகவல் மட்டும் படித்தோம். எந்த ஒரு நல்ல காரியமும் பேச்சால் பேசி விடுவது எளிது. திருவள்ளுவர் இதை
சொல்லுதல் யாவர்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
என தெரிவித்துள்ளார்.
நம் தேசத்தந்தை காந்தி தம்முடைய அறவழிப் போரில் "மாற்றம் வேண்டும் என்று கூறாதே, வேண்டிய மாற்றமாய் நீயிரு." என்று அறைகூவல் விடுத்தார். அந்த மாற்றமாகவே அவர் வாழ்ந்தவர் என்பது வரலாறு. அதே போல் நம் இந்திய நாடு ஒரு விவசாய நாடு. இந்தியாவின் முதுகெலும்பு கிரமங்கள் என காந்தியடிகள் பலமுறை கூறியுள்ளார்.
இந்த கிரமங்களில் வசிக்கும் விவசாயிகள் பலர் நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயரும் நிலை. ஏனென்றால், வானம் பார்த்த பூமியாய், மழையை எதிர்ப்பார்த்து விளைநிலங்கள் மழைப் பொய்க்கும் போது வறண்ட வெளிகளாய் மாறி விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பொய்த்திட, தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை இந்திய திருநாட்டின் சாபக்கேடு.
வள்ளுவர் உழவுத் தொழிலின் மகத்துவத்தை பின்வரும் குறளில் கூறியுள்ளார்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
இதன் பொருள், பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
இந்நிலை மாறி உழவர் பட்டினியை தவிர்க்க வேறு தொழில்கள் தேடி செல்லும் அவல நிலை. இந்த நிலையை மாற்ற SayTrees செய்யும் ஒரு சேவை, விவசாயிகளுக்கு கனி தரும் மரங்களை நடுவது. அவர்களுக்கு வேற்று வருமானம் தந்து, மழை பொய்த்தாலும் வருமானம் வாய்ப்பளிக்க இந்த SayTrees நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது. டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் உள்ள சில கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு இந்நிறுவனம் உதவி செய்து வருகிறது.
இதனால் கிடைக்கும் நன்மைகள்:
1. உழவர் தங்கள் வருமானத்தை பெறுக்கலாம்
2. மழை பொய்த்தாலும் ஒரு வருமானம் இருப்பதால், இடம் பெயர வேண்டிய கட்டாயம் இல்லை
3. கிராமப்புற வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
4. நிழல் தரும் கனி மரங்களால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது
5. வேர் விட்டு வளரும் கனி மரங்களால் பல தலைமுறைகள் பயன் பெருகின்றனர்
6. குறைந்த பராமரிப்பில் நிறைந்த பலன்
7. வயல்களின் ஓரங்களில் நடுவதால் வயலில் பயிர் செய்யலாம்
8. கனிமர நிழல்களின் கீழ் பல வகை ஊடு பயிர்கள் பயிர் செய்யலாம். (எடுத்துக்காட்டாக: மாமர நிழலின் கீழ் மிளகு பயிர் செய்வதால் செழிக்கும்)
SayTrees கடந்த ஆண்டு 11 விவசாயிகளுக்கு உதவியுள்ளது. இந்த ஆண்டு 50 விவசாயிகளுக்கு உதவ உள்ளது.
நம் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" முழக்கம், கனவு, நிறைவு பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த குழுமத்திற்கு உங்கள் நேரத்தையும், சிறு பண உதவிகளையும் செய்ய http://icfn.in/tcsworld10k/fundraiser/DonateForFARMERS/ என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
மரம் நடுவதின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் மே மாதம் 15ம் தேதி பெங்களூரில் மாரத்தான் நடைபெற உள்ளது. இதற்கு டிசிஎஸ் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
SayTrees நிறுவனம் இந்த சேவையை தமிழக தலைநகர் சென்னையிலும் செய்தால் நன்றாக இருக்குமே...