நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு... உச்ச நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய தாய் ஆஷா தேவி
நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த போது கோர்ட்டில் இருந்த நிர்பயாவின் தாய் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
டெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்த வழக்கில் நால்வருக்கும் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பின் போது கோர்ட்டில் இருந்த நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது என்று நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி தீபக் மிஸ்ரா, தான் தீர்ப்பின் இரண்டு முக்கிய அம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லப் போவதாக தெரிவித்தார்.
கருணைக்கே இடமில்லை
இந்த வழக்கை அரிதிலும் அரிதான உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், குற்றவாளிகளை விடுவிக்க கருணை என்பதற்கு எந்த அடிப்படையுமே இல்லை என்று நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார்.
மரணம் உறுதி
வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வு 4 பேருக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பிருப்பது தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. எனவே அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்வதாக அறிவித்தது.
நீதிமன்றத்தில் தாய்
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாகும் என்பதால், நிர்பயாவின் தாய் ஆஷா தேவி உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். நீதிபதிகள் தீர்ப்பின் கூறுவதற்கு முன்னர் பதற்றத்துடனும் கவலையுடனும் அவர் காணப்பட்டார்.
கதறி அழுது கண்ணீர்..
நீதிபதிகள் தீர்ப்பை கூறத் தொடங்கிய உடன் கண்கள் விரிக்க அவர்களையே ஆஷா தேவி பார்த்துக் கொண்டிருந்தார். 4 பேருக்கும் தூக்கு உறுதி செய்யப்பட்டது என்று நீதிபதிகள் அறிவித்த உடன் ஆஷா தேவி கண்ணீர்விட்டு கதறி அழுதார். பின்னர் செய்தியாளர்களிடம் நீதி வென்றது என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்தார்.