71 பேரை பலி கொண்ட ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு- 4 பேருக்கு தூக்கு தண்டனை
ஜெய்பூர்: 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 71 பேரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு மே 13-ல் ஜெய்ப்பூரில் பல இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 71 பேர் பலியாகினர். 185 பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பு ஏற்பதாக அறிவித்தது. இக்கொடூர பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முகமது சயீஃப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான் மற்றும் சையிஃபுர் ரெஹ்மான், சாபாஸ் ஹூசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனை விசாரித்து வந்த ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம், சாபாஸ் ஹூசைனை மட்டும் விடுதலை செய்தது.
எஞ்சிய 4 பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த 4 குற்றவாளிகளுக்கும் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.