போலி மதுபானங்கள் விற்றால் மரண தண்டனை... அதிரடி சட்டத்தை கொண்டு வந்த பஞ்சாப்!
அமிர்தசரஸ்: பஞ்சாபில் போலி மதுபானங்கள் விற்றால் மரண தண்டனை என்ற அதிரடி சட்டத் திருத்தத்துக்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒருவர் விற்கும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதனை விற்றவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
கடந்த ஆண்டு பஞ்சாபின் டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் மாவட்டங்களில் போலி மதுபானம் அருந்திய 80-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கோவிட் 2ம் கட்ட தடுப்பூசி: 25 லட்சம் பேர் பதிவு.. 1.46 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி
80-க்கும் மேற்பட்டோர் பலி
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போலி மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் கண்காணித்து ஒரு பகுதியில் நடவடிக்கை எடுத்தாலும் வேறு ஒரு பகுதியில் போலி மதுபானங்கள் விற்பனையை மர்ம நபர்கள் அரங்கேற்றி தொடங்கி விட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் போலி மதுபானம் அருந்திய 80-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மரண தண்டனை
இதனை தொடர்ந்து மாநிலத்தில் உலா வரும் போலி மதுபானங்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இந்த நிலையில் பஞ்சாபில் இனி போலி மதுபானங்கள் விற்றால் மரண தண்டனை என்ற அதிரடி சட்டத் திருத்தத்துக்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பிரிவு 61 ஏ மற்றும் பிரிவு 61 மற்றும் பிரிவு 63 இன் திருத்த மசோதாவை தற்போதைய பட்ஜெட் அமர்வில் அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதிரடி தடை
இந்த திருத்தபட்ட சட்டத்தின்படி பஞ்சாபில் போலி மதுபானங்களை உற்பத்தி செய்யவதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கிறது. ஒருவர் விற்கும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதனை விற்றவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். போலி மதுபானங்களால் கடுமையான காயம் ஏற்பட்டால் அதனை விற்கும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் குறைந்தது ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதம் ரூ .10 லட்சம் வரை விதிக்கப்படும்.
கடுமையான சட்டம்
போலி மதுபானம் அருந்தும் ஒரு நபருக்கு வேறு ஏதேனும் காயம் ஏற்பட்டால், குற்றவாளிக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் போலி மதுபானம் அருந்துபவருக்கு காயம் ஏற்படாவிட்டால், குற்றவாளிக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், இரண்டு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.