பிபிஓ ஊழியர் பலாத்கார கொலை: மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் - 35 ஆண்டு சிறை
புனே: விப்ரோவில் வேலை செய்து வந்த பெண் ஊழியரை கார் டிரைவரும் அவரது நண்பரும் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இந்த குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் குற்றவாளிகளின் மரண தண்டனையை 35 ஆண்டுகால ஆயுள்தண்டனையாக குறைத்து பாம்பே ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குமுன் நடந்த சம்பவம் அது. 2007 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இரவு ஷிப்ட் வேலைக்காக புனோவின் புறநகர் பகுதியான ஹிஞ்சேவாடி பகுதியில் விப்ரோ நிறுவனத்திற்கு புறப்பட்டார் அந்த பெண். அந்த இரவுதான் தன்னுடைய கடைசி இரவு என்று நினைத்திருக்க மாட்டார். வேலை செய்யும் நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த காரில் ஏறிய அந்த பெண்ணை டிரைவர் புருஷோத்தம் போரடே வேறு இடத்திற்கு கொண்டு போனான். கூடவே தனது நண்பன் பிரதீப் கோகடேவையும் கூட்டு சேர்த்துக்கொண்டான்.
நகரின் ஒதுக்குப்புறமாக இருந்த ஆள் அரவமற்ற பகுதிக்கு கொண்டு சென்ற அவர்கள், அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். துப்பட்டாவினால் கழுத்தை இறுக்கி கொன்றதோடு முகத்தை கல்லை தூக்கிப் போட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைத்தனத்.
குற்றவாளிகளுக்கு மரணம்
குற்றவாளிகளை கைது செய்த போலீசார் புனே செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஐந்து ஆண்டுகாலம் வழக்கு நடைபெற்றது. கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச்சில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பரில் மும்பை ஹைகோர்ட் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது. உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் அப்பீல் செய்தனர், 2015 ஆம் ஆண்டு மே மாதம் மரணதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
குடியரசுத்தலைவர் நிராகரிப்பு
ஆளுநர், குடியரசுத்தலைவருக்கு குற்றவாளிகள் கருணை மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் 2016ஆம் ஆண்டு ஆளுநர் கருணை மனுவை நிராகரித்தார். 2017ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் தனக்கு வந்த கருணை மனுவை நிராகரித்தார்.
தூக்கில் போட தாமதம்
இதனிடையே இருவரையும் கடந்த ஜூன் 24ஆம் தேதி தூக்கில் போட புனே செசன்ஸ் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் ஆளுநர், குடியரசுத்தலைவர் தங்களின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுத்ததில் ஏற்பட்ட தாமதம், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான வாரண்டுகளை பிறப்பித்ததில் ஏற்பட்ட தாமதத்தையும் சுட்டிக்காட்டி தங்களை தூக்கிலிட தடை விதிக்குமாறு மும்பை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மனு தாக்கல் செய்தனர்.
மரணம் வேண்டாம் ஆயுளே போதும்
மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கடந்த மே மாதம் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் பிபி தர்மாதிகாரி மற்றும் சுவப்னா ஜோஷி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுளாக குறைத்து உத்தரவிட்டார்.
35 ஆண்டுகள் சிறையில் இருக்க உத்தரவு
மரணதண்டனை நிறைவேற்றுவதில் 50 மாதங்களுக்கு மேல் காலதாமதம் ஆகிவிட்டது. குற்றவாளிகள் ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளனர். இனி இருவரும் 35 ஆண்டுகாலம் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் பிறப்பித்துள்ளனர்.