போபால்.. 4 வயது சிறுமியை காட்டுக்குள் வைத்து சீரழித்த கயவனுக்கு மார்ச் 2ல் தூக்கு!
போபால்: 4 வயது சிறுமியை காட்டுக்குள் தூக்கி சென்று கற்பழித்து அங்கேயே வீசிவிட்டு வந்த காம கொடூரனை தூக்கிலிட மார்ச் 2-ம் தேதி என நாள் குறிக்கப்பட்டுவிட்டது. இதன்மூலம் பாலியல் கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை சட்டத்தின்படி முதல் நபராக அந்த ஆசிரியர் தூக்கிலிடப்பட உள்ளார்.
மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் 4 வயது சிறுமியை மகேந்திர சிங் கோண்டு என்ற பள்ளி ஆசிரியர் கடத்தி கொண்டு காட்டுப் பகுதிக்கு தூக்கி சென்றார்.
சிறுமியை மிக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து சின்னாபின்னமாக்கியதும் சிறுமி மயங்கி விழுந்தாள். ஆனால் சிறுமி இறந்து விட்டதாக நினைத்து அந்த ஆசிரியர் காட்டுக்குள்ளேயே வீசி விட்டு சென்று விட்டார்.
அதிர்வலை
அந்த வழியாக சென்ற சிலர், படுகாயங்களுடன் விழுந்து கிடந்த குழந்தைக்கு உயிர் இருப்பதை கண்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். இந்த சம்பவம் போன வருடம் ஜுன் 30-ம் தேதி நடைபெற்றது. எனினும் நாடு முழுவதும் இந்த பாலியல் சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தியது.
நிறைய ஆபரேஷன்கள்
சிறுமிக்கு நடந்த இந்த கொடூரத்தை கண்டு மத்திய பிரதேச அரசு உடனடியாக சிறுமியை மேல்சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது. பல ஆபரேஷன்களுக்கு பிறகு சிறுமி மெல்ல மெல்ல குணமடைந்தாள்.
உறுதி செய்யப்பட்டது
சிறுமியை சிதைத்த ஆசிரியரும் கைது செய்யப்பட்டு விசாரணை ஆரம்பமானது. பிறகு அடுத்த 3 மாதங்களில் ஆசிரியருக்கு தூக்கு தண்டனை என சத்னா கோர்ட் அறிவித்து, அது கடந்த ஜனவரி 25-ம் தேதி அம்மாநில ஹைகோர்ட்டினால் உறுதியும் செய்யப்பட்டது. அப்போதுதான் அவரை வருகிற மார்ச் 2-ந்தேதி ஜாபல்பூர் சிறையில் தூக்கில் போட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவும் பிறப்பித்தனர்.
முதல் நபர்
12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. இந்நிலையில், வருகிற மார்ச் 2-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், புதிய சட்டத்தின் கீழ் தூக்கு கயிறை முத்தமிடப் போகும் முதல் நபர் இந்த ஆசிரியராகத்தான் இருக்கும்.