ஆர்.பி.ஐ கவர்னருக்கு கொலை மிரட்டல்.. கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து நேரிடும் என ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உர்ஜித் பட்டேலுக்கு அண்மையில் கொலை மிரட்டல் மெயில் ஒன்று வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் தலைமையகம் மும்பை - கோட்டை பகுதியில் உள்ளது. மத்திய அரசால் அளிக்கப்பட்ட இங்குள்ள வீட்டில் உர்ஜித் பட்டேல் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் அவரது இமெயில் முகவரிக்கு ஒரு மெயில் வந்தது. அதில் நீங்கள் உடனடியாக ஆர்பிஐ கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் உங்களின் உயிருக்கும் உங்கள் குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து நேரிடும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல், இதுபற்றி ரிசர்வ் வங்கி பொது மேலாளர் வைபவ் சதுர்வேதியிடம் கூறினார். அவர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தியபோது, நாக்பூரில் இருந்து உர்ஜித் பட்டேலுக்கு கொலை மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நாக்பூர் விரைந்த போலீசார், இது தொடர்பாக வைபவ் பட்டல்வார் என்ற 34 வயது நபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் கொலை மிரட்டல் விடுத்தது உண்மைதான் என அந்த நபர் ஒத்துக்கொண்டார்.
வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தும், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், இப்படி செய்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.