மும்பையில் அடுத்தடுத்து சோகம்: கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32-ஆக உயர்வு
மும்பை: மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பெண்டி பஜாரில் உள்ள 117 ஆண்டு பழமை வாய்ந்த 5 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மும்பையில் மழை வெளுத்து வாங்கி வெள்ளக்காடான இரண்டு நாட்களில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுகம் பணி நடந்து வருகிறது. மழையின் காரணமாக மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் 23 ஆண்கள், 9 பெண்கள் அடக்கம். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மும்பையில் கனமழைக்கு 5 பேர் பலியான நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 32 பேர் பலியானது அந்நகர மக்களை கவலை அடைய செய்துள்ளது.
இடிந்து விழுந்த 5 அடுக்குமாடி கட்டிடத்தில் 9 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. மேலும் அந்த கட்டிடத்தில் ஒரு ப்ளே ஸ்கூலும் செயல்பட்டு வந்துள்ளது. கட்டிட விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கட்டிட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.