பகவத் கீதையை படித்தால் மன அழுத்தம் ஏற்படாது, தேசிய நூலாக்கப்படும்: சுஷ்மா பேச்சு!
டெல்லி: பகவத் கீதையை படிக்கத் தொடங்கினால் மன அழுத்தம் என்பதே ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். மேலும், விரைவில் தேசிய புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப் பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை மைதானத்தில் பகவத் கீதை தொடர்பான விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் அசோக் சிங்கால், ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தேசியப் புனித நூலாக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பகவத் கீதை தேசிய புனித நூலாக அறிவிக்கப் படும் என உறுதி அளித்தார்.
மேலும், அவ்விழாவில் சுஷ்மா பேசுகையில், ‘மன அழுத்தத்தை குறைக்க சாக்லேட் சாப்பிடலாம் என்கிறார்கள். சிலர் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால், நீங்கள் பகவத் கீதையை படிக்கத் தொடங்கினால் மன அழுத்தம் என்பதே ஏற்படாது.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளது. இதன் காரணமாக தான் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது பகவத் கீதையை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
எனவே பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிப்பது தொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் ' எனத் தெரிவித்தார்.
சுஷ்மாவின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் கூறுகையில், ‘மதப் பிரச்சினையை தூண்டியுள்ள சுஷ்மாவின் கருத்து அற்பமானது. சாத்வி மீதான சர்ச்சையை திசை திருப்பவே சுஷ்மா இவ்வாறு பேசியுள்ளார்' எனத் தெரிவித்துள்ளது.