சபரிமலை அய்யப்பன் கோவிலை தேசிய புனித தலமாக அறிவிக்க வேண்டும்: உம்மன்சாண்டி
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலை தேசிய புனித தலமாக அறிவிக்க வேண்டும் என கேரள முதல்வர் உம்மன்சாண்டி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர். எனவே, சபரிமலை அய்யப்பன் கோவிலை தேசிய புனித தலமாக அறிவிக்க வேண்டும் என நேற்று கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில் அவர்கள், சபரிமலைக்கு அனைத்து தரப்பு மக்களும் வருகிறார்கள். மத சகிப்பு தன்மை மற்றும் தேசிய ஒருமை பாட்டுக்கு எடுத்துக்காட்டாக இந்த வழிப்பாட்டு தலம் திகழ்கிறது. எனவே இதனை தேசிய புனித தலமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
பிரதமரிடம் மனுவை அளித்த பின்னர், செய்தியாளார்கள் மத்தியில் உம்மன்சாண்டி கூறியதாவது:-
இடையூறுகள்...
சபரிமலை அய்யப்பன் கோவில் அடர்ந்த காட்டு பகுதிக்குள் இருப்பதாலும், புலிகள் சரணாலயம் உள்ளதாலும் இங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறது.
திருப்பதி வசதிகள் இங்கில்லை...
இதனால் திருப்பதி மற்றும் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகளை சபரிமலை வரும் பக்தர்களுக்கு செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய புனித தலமாக்க வேண்டும்...
எனவே சபரிமலையை தேசிய புனித தலமாக அறிவித்தால் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர முடியும். எனவே மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
நல்ல முடிவு எடுப்பார்...
இது தொடர்பாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் சிவகுமார் கூறுகையில், ‘மனுவை பெற்றுக்கொண்ட பிரதமர் இது தொடர்பாக நல்ல முடிவை எடுப்பார்' என்றார்.
கூடுதலாக ஒரு நாள்...
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாத பூஜைகளுக்காக 5 நாட்கள் மட்டுமே திறந்திருப்பது வழக்கம். ஆனால் இந்த மாதம் 23-ந் தேதி காலை சித்திரை ஆட்டவிழா நடக்க இருக்கிறது. இதற்காக வழக்கத்தை விட கூடுதலாக ஒரு நாள் 23-ந் தேதியும் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.