காங்கிரஸுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடையாது.. சுமித்ரா மகாஜன் அதிரடி!
டெல்லி: லோக்சபாவின் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியை அங்கீகரிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் காங்கிரஸுக்கு வழங்க முடியாது என்று லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்து விட்டார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி பலமுறை விடுத்த கோரிக்கைகளை அவர் நிராகரித்துள்ளார். மேலும் சபாநாயகரின் முடிவு சட்டப்பூர்வமானதே என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று சுமித்ரா உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதில் தான் ஏன் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைய நிராகரித்தேன் என்பது குறித்து விளக்கியுள்ளார்.
2 நிபந்தனைகள்
"எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும். 2வது சபையில் குறைந்தபட்சம் 55 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். இதில் 2வது நிபந்தனையை காங்கிரஸ் கட்சி பூர்த்தி செய்யவில்லை" என்று அதில் சுமித்ரா தெரிவித்துள்ளார்.
44 பேர் மட்டுமே
காங்கிரஸ் கட்சிக்கு தற்போது லோக்சபாவில் 44 எம்.பிக்கள்தான் உள்ளனர். ஆனால் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மேலும் சில எம்.பிக்களைச் சேர்த்து 60 பேர் கையெழுத்திட்ட மனுவை காங்கிரஸ் கட்சி சமர்ப்பித்து எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கோரியிருந்தது. ஆனால் அதை சுமித்ரா நிராகரித்து விட்டார்.
வழக்குத் தொடராத காங்கிரஸ்
சபாநாயகரின் முடிவு குறித்து லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில் இதுகுறித்து கட்சித் தலைமை மற்றும் சட்ட நிபுணர்களுடன் விவாதிக்கப்படும். இருப்பினும் சபாநாயகரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக மாட்டோம் என்றார்.
2 முறை தலைவர் இல்லை
சுமித்ரா மேலும் கூறுகையில், கடந்த 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளிலும் கூட எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.