தீபிகா படுகோனே, சோனாக்ஷி எல்லாம் ரேசன் கடையில கோதுமை வாங்குறாங்களா?
லக்னௌ: உத்திரபிரதேச மாநிலத்தில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் பெயர் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் ஏழை மக்களுக்கென பிரத்யேக ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதனை கொண்டு மற்ற ரேஷன் கார்டுகளை விட மலிவான விலையில் அவர்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியும்.
இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள சஹாப்கஞ்ச் கிராமத்தில் தீபிகா படுகோன், சோனாக்ஷி சின்ஹா, ஜக்குலின், ராணி முகர்ஜீ ஆகியோரின் பெயர்களில் ரேஷன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு திருமணம் ஆகி கணவர்கள் இருப்பது போல போலி பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரேசன் கார்டுகளில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் கணவர் பெயர் சாதுலால் எனவும், தீபிகா கணவர் பெயர் ராகேஷ் சந்த் எனவும், ராணி முகர்ஜி கணவர் பெயர் ராம் ஸ்வரூப் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் இந்த பெயருடைய ரேஷன் கார்டுகளில் மாதம் தோறும் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அலுவலக ஏடுகளில் பதிவாகியுள்ளது.
பல மாதங்களுக்கு பிறகு நடிகைகளின் பெயர் போலி ரேஷன் கார்டுகள் தங்கள் கிராமத்தில் புழங்கி வருவதை அறிந்த சஹாப்கஞ்ச் கிராம மக்கள்,இது குறித்து மாவட்ட துணை ஆட்சியாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த மோசடியை செய்த ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.