இந்து தீவிரவாதம்- நடிகர் கமல்ஹாசன் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்ய வாரணாசி கோர்ட் உத்தரவு
நடிகர் கமல்ஹாசன் மீது உ.பியில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நவம்பர் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வாரணாசி: இந்து தீவிரவாதம் என விமர்சித்த நடிகர் கமல்ஹாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து தீவிரவாதம் குறித்து வார இதழில் கமல்ஹாசன் எழுதிய கட்டுரை சர்ச்சையாக வெடித்திருக்கிறது. பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் கமல்ஹாசனை சாடி வருகின்றனர்.
தமிழக அமைச்சர்களும் பாஜகவைப் போலவே நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து வருகின்றனர். உச்சகட்டமாக இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா, நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும் என வெறித்தனமாக பேசியிருந்தார்.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மீது வழக்கறிஞர் கமலேஷ் திரிபாதி வழக்கு தொடர்ந்தார். கமல்ஹாசனின் கருத்துகள் தம்முடைய மத உணர்வுகளை புண்படுத்தியிருப்பதாக வழக்கறிஞர் கமலேஷ் தம்முடைய மனுவில் கூறியிருந்தார்.
இதை இன்று விசாரித்த வாரணாசி நீதிமன்றம், கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.