பலாத்காரத்திற்கு நிர்பயா தான் காரணம்: குற்றவாளி தரப்பு வக்கீல் பேட்டி
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு அவர் தான் காரணம் என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் எம்.எல். சர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்நிலையில் நிர்பயாவை பலாத்காரம் செய்தவர்களில் ஒருவனான முகேஷ் சிங் பிபிசிக்கு பேட்டி அளித்துள்ளான். நிர்பயா போராடாமல் அமைதியாக பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்திருந்தால் நாங்கள் அவரை தாக்கியிருக்க மாட்டோம் என்று முகேஷ் சிங் தெரிவித்துள்ளான்.
திமிர்
ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்ற உணர்வு சிறிதும் இன்றி நடந்த சம்பவத்திற்கு அந்த பெண் மீதே குற்றம் சுமத்தியுள்ளான் முகேஷ். இதற்கு மகளிர் அமைப்புகள், பொது மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர்
நிர்பயா அவமதிக்கப்பட்டுவிட்டதாக மக்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் #NirbhayaInsulted என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
வழக்கறிஞர்
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல். சர்மா பலாத்கார சம்பவத்திற்கு மாணவி தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இனிப்பு
தெருவில் இனிப்புகளை வைத்தால் அதை நாய்கள் வந்து சாப்பிடத் தான் செய்யும். நிர்பயாவின் பெற்றோர் அவரை எதற்காக இரவு நேரத்தில் யாருடனும் வெளியே அனுப்புகிறார்கள்? என்று சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
நிர்பயா
சம்பவம் நடந்த இரவு நிர்பயாவுடன் இருந்தது அவரது காதலன் கிடையாது. தங்களின் மகள் யாருடன், எங்கு செல்கிறார் என்பதை நிர்பயாவின் பெற்றோர் அல்லவா கண்காணித்திருக்க வேண்டும் என்று சர்மா தெரிவித்துள்ளார்.
பெண்கள்
நிர்பயா பற்றிய ஆவணப்பட தயாரிப்பாளர்கள் என்னையும் பேட்டி எடுக்க வந்தனர். அவர்களிடம் இந்திய கலாச்சாரம் தான் சிறந்தது என்றேன். நம் கலாச்சாரத்தில் பெண்களுக்கு இடம் கிடையாது என்று வழக்கறிஞர் சர்மா தெரிவித்துள்ளார்.