முப்படையிலும் பிரச்சனை... அந்தோணி தனது ராஜினாமா செய்ய வேண்டும்: பா.ஜ.க
நேற்று மும்பை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சிந்து ரத்னா' என்ற நீர் மூழ்கி போர்க்கப்பலில் ‘திடீர்' தீ விபத்து உண்டானது. இந்த தீ விபத்தில் சிக்கிய 7 கடற்படை வீரர்கள் உடல்நிலை பாதுக்கப்பட்டு மும்பை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தின்போது மாயமானதாக தேடப்பட்டு வந்த இரு அதிகாரிகள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ‘ஐ.என்.எஸ். சிந்து ரத்னா' நீர் மூழ்கிக்கப்பல் தீ விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று, கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடற்படை தளபதியாக டி.கே.ஜோஷி பதவி ஏற்ற கடந்த 7 மாதங்களில் இந்திய கடற்படை போர்க்கப்பல்களில் கிட்டத்தட்ட 10 அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் மிகப்பெரிய விபத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி மும்பை துறைமுகத்தில் நடந்தது ஆகும். அந்த விபத்தில் ‘ஐ.என்.எஸ். சிந்துரக்ஷாக்' என்ற போர்க்கப்பல், கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 18 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலியானார்கள்.
ஜோஷியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மூத்தத் தலைவர் ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியுள்ளார்.
முப்படைகளிலும் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று அந்தோணி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.