ரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.. நிர்மலா விளக்கம்!
ரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: ரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்தும் ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகாமல் இருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு பாஜக ஆட்சியில் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது.
இந்த நிலையில் ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். பாஜக கட்சி இதில் உண்மைகளை மறைப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தொடர் புகார்களுக்கு தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். அதன்படி ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த விலையை விட குறைவான விலையிலேயே விமானம் வாங்கினோம். நடைமுறைபடியே ஒப்பந்தம் நடந்து இருக்கிறது. காங்கிரஸ் நிர்ணயித்த விதியின்படியே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அவர்கள் நிர்ணயித்த விதியை பின்பற்றினால் எப்படி ஊழல் என்று அவர்களே கூறுகிறார்கள். காங்கிரஸ் கூட்டணி அரசை விட பாஜக 9 சதவிகிதம் குறைவான விலையில் விமானம் வாங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் முழுமையான ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
ரபேல் தயாரிப்பில் இருந்து எச்ஏஎல்லை கைவிட்டது காங்கிரஸ்தான். அதன்பின்தான் பாஜக ஆட்சியில் ரபேல் ஒப்பந்தம் தனியாக நடந்தது.
விமான படையில் ஒரு ஸ்குவாட்டரானுக்கு 33 ஆக விமான எண்ணிக்கை 2013லேயே குறைந்துவிட்டது. இந்திய விமான படைக்கு உடனடியாக விமானம் வாங்க வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் ரபேல் ஒப்பந்தம் அவசரமாக நடந்தது என்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.