பாலியல் புகார்: ராஜினாமா செய்ய மாட்டேன் - ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.கங்குலி
சட்ட பயிற்சி மாணவர் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரிடம் தான் பயிற்சி பெற்ற போது, அவர் பாலியல் ரீதியாக தன்னை தொல்லைப்படுத்தினார் என்ற பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டார். மேலும் அந்த நீதிபதி தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அப் பெண் தெரிவித்திருந்தார்.
அவர் கூறிய இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தானே முன்வந்து, இதுபற்றி விசாரணை நடத்த 3 நீதிபதிகளை கொண்ட குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு 7 முறை கூடி விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த நவம்பர் 28-ந் தேதி தலைமை நீதிபதியிடம் வழங்கியது.
இதைத்தொடர்ந்து, பாலியல் புகாரில் சிக்கியது நீதிபதி ஏ.கே.கங்குலி என்ற தகவல் வெளியானது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தற்போது மேற்கு வங்காள மாநில மனித உரிமை ஆணையராக பதவி வகித்து வருகிறார்.
நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான புகாருக்கு முகாந்திரம் உள்ளதாகவும், என்றாலும் அவர் ஓய்வு பெற்றுவிட்டதால் அவர் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எதுவும் எடுக்க விரும்பவில்லை என்றும் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அறிவித்தார்.
இதனை அடுத்து அவர் மேற்கு வங்காள மாநில மனித உரிமை ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதனிடையே நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, மேற்கு வங்காள மாநில மனித உரிமை ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.